இது திமுகவுக்கு அவமானம்.. ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர் ; எஸ்வி சேகர் பரபர பேச்சு!!

Author: Babu Lakshmanan
17 April 2023, 9:53 am
Quick Share

காஞ்சிபுரம்; அரசியலில் இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து பயப்படுவதாக காஞ்சிபுரத்தில் பாஜக பிரமுகர் திரைப்பட நடிகருமான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் 11-வது தேசிய இசை திருவிழாவில் கலந்து கொண்டு இசைப் பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பாஜக பிரமுகர் திரைப்பட நடிகருமான எஸ்பி சேகர் கலந்து கொண்டு இசைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

பின்னர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த எஸ் வி சேகர் பேசியதாவது :- நேரடியாக அண்ணாமலை குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. தினம்தோறும் எனக்கு தோன்றும் விஷயங்களை, நகைச்சுவையாக ட்விட்டரில் பதிவு செய்து வருகிறேன். ஒருவரை புத்திசாலி என்று கூறுவதால், அடுத்தவர் முட்டாள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது . விஷயத்தில் உள்ளே சென்று, சூசகமாக கேள்வி கேட்டால் அதற்கு பதில் இல்லை, நான் அது போன்று யோசிக்கவில்லை.

சமூக வலைதளங்களில் வரும் நகைச்சுவைகளை வேறு யாருடனாவது பொருத்திப், பொருத்தி பார்த்துக் கொண்டிருந்தால் அது என்ன ஆகிவிடும் என்றால், நாம் போரிட வேண்டியது எதிராளியோடு, நமக்குள் போட்டுக் கொண்டிருந்தால் பலகீனமாகிவிடும்.

நான் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர். குறிப்பாக நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற, தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பது எனது ஆசை. நான் கவுன்சிலர் பதவி வேண்டும் என்றோ, எம்எல்ஏ பதவி வேண்டுமென்றோ, இந்த கட்சியில் பயணிக்கவில்லை. அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ட்விட்டர் என்பது தரம் கெட்ட நபர்கள் செய்யும் விமர்சனங்களால் நிரம்பியுள்ளன. அவ்வாறு செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன், என கூறினார்.

மேலும் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது மிகச் சிறப்பான ஒன்று. தேவையான ஒன்று, அவசியமான ஒன்று, இன்றைக்கு உலகத்தில் எல்லாரும் சொல்கிறீர்கள், உலகத்தில் சேவைக்கு சிறந்தது ரெட் கிராஸ் என்கிறீர்கள், ரெட் கிராஸ்க்கு இணையான சேவையை கொடுப்பதில் இந்தியாவின் ஆர்எஸ்எஸ் மட்டும் தான்.புயலோ, வெள்ளமோ, கொரோனாவோ அல்லது சுனாமியோ எது வந்தாலும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தான் அந்த சேவையில் முன் இருக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் மிகப்பெரிய ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கக்கூடிய அமைப்பே தவிர, அரசியல் அமைப்பு கிடையாது. ஆனால் அரசியலில் இருப்பவர்கள் ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து பயப்படுகிறார்கள். ஏனென்றால், ஒழுக்கத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம ஒழுக்க இல்லாதவர்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறோமே, இப்படி ஒழுக்கத்தை வைத்து சொல்லிக் கொடுத்தால், ஜனங்கள் திருந்தி ஒழுக்கம் ஆகிவிட்டால் என்ன பண்ணுவது என்ற பயத்தினால் ஆர்எஸ்எஸ்சை கூறுகிறார்கள்.

காவல் துறையினர் கட்டுப்பாடு போட்டு இருக்கிறார்கள் கம்பு கொண்டுவரக் கூடாது, அது கொண்டு வரக்கூடாது என்று. இன்றைக்கு பாருங்கள் திருமாவளவன் ஊர்வலத்தில் கொடி கம்போடு தான் வந்திருக்கிறார்கள். அப்போ திருமாவளவன் கட்சி ஒழுக்கமாகவே இருக்கட்டும். அதைவிட ஒழுக்கமான கட்சி தான் ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ்சை தடை செய்ய வேண்டும் என்பது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று, நினைக்கிற சின்ன சில்லறைத்தனமான அரசியல்வாதிகளுடைய மனோபாவம். அதற்கு மேல் அதற்கு பதில் சொல்வதற்கு ஒன்றுமே கிடையாது.

காலையில் எழுந்திரு பல்லு விலக்கு, சுவாமி கும்பிடு, பெத்தவர்களுக்கு மரியாதை கொடு, பகவத் கீதையை படி, பெரியவர்களுக்கு மரியாதை கொடு, மாதா, பிதா, குரு, தெய்வம். இதை எல்லாவற்றிற்கும் எடுத்துச் சொல்லு. சமுதாயத்திற்கு நல்லபடியாக நடந்து கொள் என்று சொல்வது வந்து ஒரு தடை செய்யப்பட வேண்டிய இயக்கம் என்றால், அது இந்தியாவில் செய்யவே முடியாது.

சுப்ரீம் கோர்ட்டில் போய் ஆர்எஸ்எஸ் ஜெயித்து இருக்கிறார்கள் என்றால், அதுவரைக்கும் எதிர்த்து நின்றவர்கள் அவமானப்பட வேண்டிய விஷயம். நாம தப்பு பண்ணி விட்டோம், அப்படி என்று அவமானப்பட வேண்டும், என திரைப்பட நடிகர் எஸ்வி சேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Views: - 315

0

0