தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை ; பிளஸ் 1 பொதுத்தேர்வின் போது அத்துமீறல் : போக்சோவில் ஆசிரியர் கைது..!!

Author: Babu Lakshmanan
15 March 2023, 1:17 pm
Quick Share

பிளஸ் 1 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட ஓரிக்கை பாரதிதாசன் என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யபட்டுள்ளார்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் +2, +1 பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அரசு பொது தேர்வு தொடங்கி கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,917 பேர் பிளஸ் டூ தேர்வையும், 13114 பேர் +1 தேர்வையும் எழுத 53 தேர்வு மையங்கள் அமைத்து, பறக்கும் படை, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆசிரியர்கள் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Practical Exam -Updatenews360

காஞ்சிபுரம் மாவட்டத்தில் +1 வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 மாணவர்களும்,7023 மாணவிகளும் என 13 ஆயிரத்து 114 பேர் 53 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு எழுத தேர்வு அறைக்கு செல்லும் மாணவ, மாணவியர் களை பரிசோதனை செய்த பின்பே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்களுக்கு உதவும், அவர்கள் சொல்வதை எழுதவும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

அந்த வகையில் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் ஒன் அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் தேர்வு எழுதி உள்ளார். தேர்வு அறையின் கண்காணிப்பாளராக ஓரிக்கை பகுதியில் செயல்படும் பிரபல தனியார் பள்ளியின் ஆசிரியர் தேர்வு கண்காணிப்பாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில், தனி அறையில் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவுவது போல வந்து, அவ்வப்போது பாலியல் சீண்டல் செய்து உள்ளார். தேர்வு எழுதி முடித்து விட்டு வந்த மாணவி, இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவியின் பெற்றோர் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பாலு செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதனை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றம் செய்ததை தொடர்ந்து, பள்ளி மாணவி மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் ஜெகன்நாத் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆசிரியர் ஜெகன்நாத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வரவே, அவரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒழுக்கத்திற்கு சிறந்த இடமாக அறியப்பட்டு வரும் ஓரிக்கை தனியார் பள்ளியின், ஆசிரியர் ஒழுக்கக்கேடான வகையில் நடந்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஓரிக்கை தனியார் பள்ளியின் ஒழுக்கத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

Views: - 372

0

0