அடிக்கடி கோவிலுக்கு வந்து யானையுடன் நட்பு பாராட்டிய சகோதரர்கள்… நண்பர்களைக் கண்டு ஆனந்த துள்ளல் போட்ட ‘பிரக்ருதி’..!

Author: Babu Lakshmanan
25 January 2022, 1:56 pm
Quick Share

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு புகழ்பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில் யானை பிரக்ருதியுடன் சிறுவர்கள் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் சனிபகவான் ஆலயத்தில் பிரக்ருதி என்ற பெண் யானை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த யானை ஆசி வழங்குவது வழக்கம்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி என்ற கட்டுப்பாடு காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கோவிலுக்கு வாடிக்கையாக வருகை தரும் காரைக்காலைச் சேர்ந்த சிவபாரதி-நாராயணன் சகோதரர்கள் யானையிடம் விளையாடி ஆசிபெற்று செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தங்கள் பெற்றோருடன் கோவிலுக்கு வந்த சகோதரர்கள் வழக்கம் போல யானையிடம் ஆசி பெற சென்ற போது, யானை கோவில் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி கொண்டிருப்பதைப் பார்த்து குஷியாகி விட்டனர். குளத்தில் குளித்த யானை பிரக்ருதியும் சிறுவர்களை கண்டவுடன் ஆர்வமாக மேலே வந்து சிறுவர்களை பார்த்து தனது வழக்கமான பிளிறல் சத்தம் எழுப்பியது. தொடர்ந்து சிறுவர்களுக்கு ஆசிகள் வழங்கி தனது துதிக்கையால் டாட்டா சொல்லி வழியனுப்பி வைத்தது. கோவில் யானையுடன் சிறுவர்கள் விளையாடும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Views: - 1938

0

0