தென்காசி திமுகவில் மீண்டும் வெடித்த கோஷ்டி மோதல் ; நகர்மன்ற தலைவர் – திமுக பிரமுகர் இடையே அடிதடி!!

Author: Babu Lakshmanan
20 September 2023, 5:58 pm
Quick Share

தென்காசியில் திமுக பிரமுகர் மற்றும் நகர் மன்ற தலைவர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியின் தலைவராக இருப்பவர் சாதிர். இவர் நகர செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், முன்னாள் நகர துணை செயலாளரும், சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளருமான இஞ்சி இஸ்மாயில் என்பவருக்கும், ஏற்கனவே கட்சி பொறுப்பு வழங்குவதில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென்காசிக்கு வந்திருந்த பொழுது, நகர செயலாளர் என்கின்ற பொறுப்பில் இருக்கும் சாதிர், உதயநிதி ஸ்டாலினை வரவேற்க அதிக அளவில் விளம்பரங்கள் செய்யவில்லை என்றும், அதே சமயத்தில் இஞ்சி இஸ்மாயில் ஏராளமான விளம்பரங்கள் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே விளம்பரங்கள் செய்வதில் ஏற்கனவே மனக்கசப்பு இருந்து வந்த நிலையில், ஒப்பந்த பணி குறித்து இஞ்சி இஸ்மாயில் என்பவர் சாதிர் குறித்து தவறாக முகநூல் பக்கத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், இன்று காலையில் இஞ்சி இஸ்மாயிலும், சாதிரும், தென்காசி முக்கிய வீதியில் உள்ள ஒரு டீக்கடையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது, இஞ்சி இஸ்மாயில், சாதிரை பற்றி ஏதோ தவறாக முகநூல் பக்கத்தில் ஒரு தகவல் வெளிவந்ததாகவும், அதை ஏன் செய்தாய் என்று கேட்ட பொழுது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அது மோதலாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சாதிர் இஞ்சி இஸ்மாயிலை தாக்கியதாகவும், இஞ்சி இஸ்மாயில் சாதிரின் கையில் கடித்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, வாக்குவாதம் ஏற்பட்டு இரண்டு நபர்களும் தரையில் உருண்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இரண்டு நபர்கள் தென்காசி உள்ள வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

அப்பொழுது, இஞ்சி இஸ்மாயில் தான் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென்காசி பகுதியில் உள்ள சாதிர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சாதிர் மகன் ரபீக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மூன்று நபர்களும் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இருவரிடமும் தென்காசி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நகர்மன்ற தலைவரும், நகரச் செயலாளருமான சாதிர் மற்றும் இஞ்சி இஸ்மாயில், சாதிர் உடைய மகன் ரபிக் ஆகிய மூன்று நபர்களும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தென்காசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தென்காசி போலீசார் அரசு மருத்துவமனையில் சென்று மூன்று நபர்களிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும்பரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தென்காசி தெற்கு மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசலில் இருந்து வரும் நிலையில், பல்வேறு முறை அது வெட்ட வெளிச்சமாகின்ற நிலையில், தற்போது மீண்டும் அது வெடித்துள்ளது.

இதனிடேய, நகர் மன்ற தலைவர் சாதிர் வீட்டிற்கு சென்று தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இதுவரை போலீசார் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வழக்குப்பதிவு செய்யவில்லை. இது குறித்து நகர மன்ற தலைவரிடம் கேட்டபோது, முறையாக மாவட்ட செயலாளர் அனுமதி பெற்று தலைமைக்கு தெரியப்படுத்த உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து, இஞ்சி இஸ்மாயிலிடம் கேட்டபோது, நான் நீண்ட காலமாக கட்சி பணி ஆற்றி வருவதாகவும், அதனால் சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், இது குறித்து முறையாக தலைமைக்கு புகார் அளிக்க உள்ளதாகவும், அதே போல காவல்துறையினருக்கும் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 254

0

0