நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது தப்பியோடிய கைதி… சிசிடிவி காட்சியை வைத்து தேடும் போலீசார்…!!

Author: Babu Lakshmanan
26 March 2022, 2:05 pm
Quick Share

தஞ்சை: தஞ்சையில் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்து வந்தபோது போலீசாரை தள்ளிவிட்டு விட்டு தப்பியோடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி தாரநல்லூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகன் தர்மராஜ் (27). இவர் மீது திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் கொள்ளை வழக்குகள் உள்ளன. தற்போது புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஐந்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இதனால் தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக நேற்று தர்மராஜை, புதுக்கோட்டையில் இருந்து போலீசார் அழைத்து வந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு நேற்று இரவு 7.15 மணியளவில் சிறைக்கு அழைத்து செல்லும் போது ராமநாதன் மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் பாதுகாப்புக்கு வந்த இரண்டு போலீசாரையும் கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார்.

இதில் சுதாரித்து எழுந்து ஒரு போலீஸ்காரர் துப்பாக்கியுடன் தர்மராஜை துரத்திச் சென்றார். இருப்பினும் அவனை பிடிக்க முடியவில்லை. வாகன போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் அதை பயன்படுத்தி தப்பியோடி விட்டார்.

இதையடுத்து போலீசார் தஞ்சை மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தஞ்சை – திருச்சி, பட்டுக்கோட்டை, திருவாரூர் செல்லும் சாலை என பல பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 819

0

0