வாரிசு சான்றிதழ் பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் ; வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
12 July 2023, 4:37 pm
Quick Share

சென்னை தண்டையார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட இரட்டைக் குழி தெருவில் செயல்பட்டு வரும் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காத்பாடா பகுதியை சேர்ந்தவர் லட்சுமி – ஞானம் தம்பதியினர் கூலி வேலை செய்து வரும் இவர்கள், தனது மாமனார் உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு சட்டபூர்வ வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இ சேவை மையத்தின் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், வெகு நாட்கள் ஆகியும் சான்றிதழ் கிடைக்க பெறாமல் வருவாய் அலுவலர்கள் இழுத்தடித்துள்ளதால், நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டபோது, அவர்களிடம் பேசிய அலுவலகத்தின் உதவியாளர் ஒருவர், சான்றிதழ் கிடைப்பது சிரமம் என்றும், தாசில்தாருக்கு ஏதாவது பணம் கொடுத்தால் சான்றிதழ் வெகுவிரைவில் கிடைத்து விடும் என தெரிவித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த லஷ்மி, தனக்கு தெரிந்த சூலைப் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சசிகுமார் என்பவரை அழைத்துக் கொண்டு, வட்டாட்சியர் அலுவலகம் சென்ற நிலையில் முப்பதாயிரம் வரை பணம் கேட்டதாகவும், ஆனால் தங்களால் 15 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும் என லஷ்மி தனது நகை அனைத்தும் அடகு கடையில் வைத்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்டு அலுவலக உதவியாளர் தனசேகர் என்பவர் பணத்தை வாங்கி எண்ணி சான்றிதழ் கிடைத்து விடும் என கூறும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே போன்று, இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி பணம் கொடுத்தால் மட்டுமே அரசு இலவசமாக வழங்கும் சான்றிதழ்கள் கிடைக்க பெறுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும், நேரில் வந்து புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக கூறுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பணம் கேட்கும் பட்சத்தில் பணத்தை அளிக்கும் போது கையும் களவுமாக பிடிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத்துறை மெத்தனமாக இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் சான்றிதழுக்கு இது போன்ற அதிக அளவில் லஞ்சம் வாங்கி இருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Views: - 267

0

0