டிஎஸ்பி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு.. நில மோசடி செய்து ஆளுங்கட்சியினர் துணையுடன் மிரட்டுவதாக புகார்!!

Author: Babu Lakshmanan
30 June 2023, 3:33 pm
Tirupur - Updatenews360
Quick Share

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவியில் வசித்து வருபவர் ஆறுசாமி என்பவரது மகன் ஜெகநாதன். இவர் தனக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தில் தனது குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பால் பண்ணை அமைப்பதற்காக அவரது நண்பர் மூலம் திருப்பூரை சேர்ந்த திமுக நிர்வாகி சிவலிங்கம் என்பவரிடம் தனது ஆறு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து 18 மாதங்களில் திருப்பி தருவதாக கூறி 28 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

18 மாதங்களில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஜெகநாதன் வங்கியில் கடன் வாங்க முயற்சித்துள்ளார். வங்கியில் கடன் கிடைக்காததால் கோவை துடியலூர் சேர்ந்த பைனான்ஸ் புரோக்கர் மூலம் பெருமாநல்லூரைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரிடம் 40 லட்சம் ரூபாயை கடனாக பெற்று சிவலிங்கத்திற்கு பணத்தை திருப்பி செலுத்தி அடமானம் வைத்த பத்திரத்தை மீட்டு உள்ளார்.

அதே நாளில் பாலச்சந்திரன் என்பவருக்கு கிரைய உடன்படிக்கை எழுதி கொடுத்துள்ளனர். பாலச்சந்திரனிடம் பெற்ற கடனுக்கு ஜெகநாதன் தவறாமல் வட்டி செலுத்தி வந்துள்ளார்.

ஜெயகாந்தன் பலமுறை பாலச்சந்திரனிடம் தான் எழுதிக் கொடுத்த ஆவணத்தை ரத்து செய்யும்படி கேட்டு வந்த நிலையில் பாலச்சந்திரன் ஆவண பத்திரத்தை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

சந்தேகம் அடைந்த ஜெகநாதன் வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்தபோது பாலச்சந்திரன் போலியான பத்திரங்கள் தயாரித்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது ஆறு ஏக்கர் நிலத்தினை கடந்த 2020 ஆம் ஆண்டு உமாராணி என்பவருக்கும் காதர் மைதீன் என்பவருக்கும் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

உமாராணி மற்றும் பாலச்சந்திரன் ஆகியோர் முருகேசன் மற்றும் விக்ரம் குமார் என்பவருக்கு அந்த பூமியை விற்பனை செய்துள்ளனர்.இதுகுறித்து ஜெயகாந்தன் பாலச்சந்திரன் கேட்டதற்கு கொஞ்ச நாள் பொறுத்திருக்கவும் எனவும் முருகேசன்,விக்ரம்குமாரிடம் இருந்து மறுக்கிரையம் செய்து தருவதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து பாலச்சந்திரனிடம் கேட்டால் ஆளுங்கட்சியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் பல அடியாட்களை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் ஜெயகாந்தனுக்கு தெரியாமல் உயர்நீதிமன்றத்தில் நிலத்தை அளப்பதற்கு ஆணை வாங்கி உள்ளதாகவும் எனது நிலத்தை அபகரிக்க பாலச்சந்திரன் முயற்சிப்பதாகவும் தனது நிலத்தை மீட்டு தருமாறு கூறி இன்று ஜெகநாதன் தனது குடும்பத்தினருடன் பல்லடம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்திருந்தார்.

புகார் மனு அளிக்க வந்த ஜெகநாதன் திடீரென தன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்த காவல்துறையினர் மற்றும் அவரது உறவினர்கள் ஜெகநாதனை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரைக் காப்பாற்றினார்.

ஜெகநாதனின் புகாரை விசாரிப்பதாகவும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பல்லடம் டிஎஸ்பி சௌமியா தெரிவித்துள்ளார்.திடீரென விவசாயி ஜெகநாதன் டிஎஸ்பி அலுவலகத்திற்குள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 259

0

0