அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவதில் போட்டி.. ஒரே சமூகத்தினரிடையே மோதல் ; அடித்து நொறுக்கப்பட்ட காவல்நிலையம் … தேனியில் நடந்த கலவரம்!!

Author: Babu Lakshmanan
15 April 2023, 11:18 am
Quick Share

தேனி ; அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த காவல் துறையினருக்கும், இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை முதல் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடைசி நிகழ்ச்சியாக பட்டாளம்மன் கோவில் தெரு, இளைஞர்களும் தெ,கல்லுப்பட்டி இளைஞர்களும் அக்கினி சட்டி மற்றும் மேளதாளங்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்தனர்.

அப்பொழுது திடீர் என இரண்டு கோஸ்டிகளுக்கும் யார் முதலில் செல்வது என்று தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் விழா கமிட்டியாளர்கள் வைத்திருந்த சேர் மற்றும் இருசக்கர வாகனங்களை விழாவிற்கு வந்திருந்த இளைஞர்கள் அடித்து நொறுக்கினார்.

மேலும், மோதலை தடுக்க வந்த காவல்துறையினரை மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் விரட்டினார்கள். இதில் காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி காவல் நிலையத்திற்குள் கல் வீச்சு வீசி தாக்கினார்கள். இதில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆய்வாளர் வாகனம், 108 வாகனம், பேருந்து கண்ணாடிகள் உடைந்தது.

மேலும் 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது. இதில் காவல்துறை ஆய்வாளர் மீனாட்சி உட்பட பல 13 காவல்துறையினருக்கு கல் எரிந்ததில் காயம் ஏற்பட்டது.

இச்சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால், பெரியகுளத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலவரத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்தும், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருவதால், பெரிய குளத்தில் பதட்டம் நிரம்பி காணப்படுகிறது.


மேலும், கலவரம் ஏற்பட்ட பகுதியை பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து, பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷரிப் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 311

0

0