கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய பாஜக நிர்வாகி… வெளியே வந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி ; காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்!!

Author: Babu Lakshmanan
15 April 2023, 11:23 am
Quick Share

செங்கல்பட்டு ; தாம்பரம் அருகே நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நிர்வாகியின் கார் மீது முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக பட்டியல் அணி செயற்குழு உறுப்பினராக இருப்பவர் பக்தவச்சலம். இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வந்தார்.

கருத்தரங்கம் முடிந்த பின்னர் வெளியே சென்று அவரது காரை பார்த்தபோது, கார் முழுவதும் முட்டை, தக்காளிகள் வீசப்பட்டும், காரை சேதப்படுத்தியபடியும் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு 100க்கும் மேற்பட்ட பாஜவினர் ஒன்று திரண்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் பாஜகவினர் சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியனிடம் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட துணை ஆணையர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், நடந்த இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 205

0

0