100 அடி பள்ளத்தில் கார் விழுந்து விபத்தில் 7 ஐயப்ப பக்தர்கள் உடல்நசுங்கி பலி ; சபரிமலை சென்றுவிட்டு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்…!!

Author: Babu Lakshmanan
24 December 2022, 11:47 am
Quick Share

தேனி ; தேனி அருகே 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். தரிசனம் முடிந்தபிறகு அவர்கள் நேற்று இரவு ஆண்டிப்பட்டி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அந்த காரில் சிறுவன் உள்பட 11 பேர் இருந்தனர்.

காரை ஆண்டிப்பட்டியை அடுத்த பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (40) என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் கார் நேற்று இரவு 11.30 மணி அளவில் குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகில் வந்தது.

அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார் மலைப்பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் தலைகீழாக பாய்ந்தது. அப்போது அங்குள்ள பெரியாறு அணையில் இருந்து லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்திற்கு செல்லக்கூடிய ராட்சத குழாய்கள் மீது கார் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (46), தேவதாஸ் (55), சிவக்குமார் (45), சக்கம்பட்டியை சேர்ந்த முனியாண்டி (55), மறவபட்டியை சேர்ந்த கன்னிசாமி (60), சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த வினோத் (43) மற்றும் ஒருவர் என 7 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 430

0

0