சட்டப்பேரவைக்குள் ஆளுநர் ரவி வருவது இதுவே கடைசி… இனி தான் எல்லாமே : ஈவிகேஎஸ் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2024, 2:11 pm
EVKS
Quick Share

சட்டப்பேரவைக்குள் ஆளுநர் ரவி வருவது இதுவே கடைசி… இனி தான் எல்லாமே : ஈவிகேஎஸ் பரபரப்பு!!

இந்தாண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர் அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுவதும் படிக்காமல், அதில் குறிப்பிட்டிருந்த திருக்குறளை மேற்கொள்காட்டி வெறும் 4 நிமிடங்களை உரையை வாசித்து விட்டு அமர்ந்தார்.

தமக்கு அளிக்கப்பட்டுள்ள உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாகவும், அரசு தயாரித்த உரையை படிப்பது அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல் அமையும் என்று கூறிய ஆளுநர் ஆர்என் ரவி, அரச தயாரித்த உரையின் உண்மைத் தன்மை மற்றும் நெறிகளுடன் தமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் கூறினார். மேலும், தேசிய கீதத்தை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் இசைக்க வேண்டும் என பலமுறை கூறியதாகவும், ஆனால், அதனை நடைமுறைப்படுத்தது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இறுதியில், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் உரையை முடித்தார்.

மேலும், அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கிய போது, தேசிய கீதம் வாசிக்கப்படும் முன்பு அவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி வெளியேறினார்.

தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் விடுவது இதுவே முதல்முறை. ஆளுநர் தனது உரையை வாசித்து இருக்க வேண்டும் என்று இந்த செயலுக்கு ஆளும் தரப்பினர் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சட்டசபை வளாகத்தில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “என்னைப் பொறுத்தவரை ஆளுநர் ரவி சட்டசபைக்கு வருவது இதுவே கடைசியாக இருக்கும்.. இனிமேல் அவர் இந்த அவைக்கு வர வாய்ப்பு கிடையாது.. காரணம் தேர்தல் முடிந்த உடன் இவரைத் தூக்கி எறிவார்கள்.
தமிழ்நாட்டில் எப்போதும் எந்த நிகழ்விலும் தேசிய கீதம் என்பது நிகழ்ச்சி முடிந்தவுடன் தான் வாசிப்பார்கள்.

இது கூட தெரியாத ஒரு ஆளுநர்.. தேசிய கீதம் பட வேண்டும் எனச் சொல்வது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது. இப்படி அவர் செய்வதற்குப் பதிலாக அவர் வாராமலேயே இருந்து இருக்கலாம்” என்று அவர் தெரிவித்தார். அதாவது தேர்தல் முடிந்த பிறகு மத்தியில் புதிய அரசு அமையும் என்றும் அதன் பிறகு ஆளுநர் ரவி நீக்கப்படுவார் என்பதையே ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.

Views: - 139

0

0