காதல் திருமணத்தால் ஆத்திரம்… வீடு புகுந்து புதுமணத் தம்பதிகள் அரிவாளால் வெட்டிக்கொலை… பெண்ணின் தந்தை உள்பட 5 பேருக்கு குண்டாஸ்!!

Author: Babu Lakshmanan
4 December 2023, 9:28 am
Quick Share

தூத்துக்குடி ; தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 02.11.2023 அன்று தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் மகன் மாரிசெல்வம் (23) மற்றும் அவரது மனைவி கார்த்திகா (21) ஆகிய இருவரையும் வீடுபுகுந்து அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டனர்.

இந்த‌ வழக்கில் பெண்ணின் தந்தை சண்முகம் மகன் முத்துராமலிங்கம் (47), தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான வாசுதேவன் மகன் பரத் விக்னேஷ்குமார் (25), தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (23), ஏரல் சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த அங்குதாஸ் மகன் கருப்பசாமி (24), தூத்துக்குடி சங்கர் காலனி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி (27) மற்றும் சிலரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரை ஏற்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 30 பேர் உட்பட 169 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Views: - 298

0

0