இப்படியும் ஒரு திருட்டா..? மேஜிக் பேனா மூலம் நூதன முறையில் மணல் கொள்ளை… மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
1 August 2023, 11:21 am
Quick Share

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை பஞ்சாயத்து உட்பட்ட கொந்தன் குறிச்சி குளத்தில் அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதுடன் நூதன முறையில் மணல் கொள்ளை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா மூல கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொந்தன் குறிச்சி குளத்தில் எஸ்ஆர் என்ற நிறுவனம் உடன்குடி அனல் மின் நிலைய பணிக்காக மணல் அள்ள மாவட்ட கனிமவள துறையிடம் அனுமதி பெற்று, அனல் மின் நிலைய பணிக்கு மணலை கொண்டு செல்லாமல் கரம்பை மண், சவுண்டு மண், சரல் மண் ஆகியவற்றை அரசு நிர்ணயித்த அளவைவிட பத்தடி ஆழத்திற்கு அதிகமாக மணலை அள்ளி முறைகேடாக விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் கனிம வளத்துறை சார்பில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டில் நூதன முறையில் மேஜிக் பேனாவை பயன்படுத்தி ஒரே சீட்டை பலமுறை மணல் அள்ள பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.

கனிம வள அதிகாரிகள் கொடுத்த சீட்டில் மேஜிக் பெனா பயன்படுத்துவதால், அந்த எழுத்தை தீயை வைத்து காண்பித்தவுடன் எழுத்து அழிந்து விடுகிறது. இதனால் தேதி, நேரம், மாற்றி மாற்றி எழுதிக் கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, இன்று மீனாட்சி பட்டி கிராம மக்கள், இந்த மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், மணல் கொள்ளையில் ஈடுபடும் எஸ்ஆர் நிறுவன உரிமையை ரத்து செய்து மணல் கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

Views: - 359

1

0