20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் : முதலமைச்சருக்கு தபால் அனுப்பி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2022, 12:30 pm
SDPI Protest - Updatenews360
Quick Share

கோவை : தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் தமிழக முதலமைச்சருக்கு கோவை கூட்செட் சாலையில் உள்ள தபால் நிலையத்தில் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு எஸ்.டி.பி.ஐ. கோவை மத்திய மாவட்ட செயலாளர் முகமது இசாக் தலைமை தாங்கினார். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், சிறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு 25 ஆயிரம் கடிதங்கள் அனுப்ப முடிவு செய்து உள்ளோம்.

முதல் கட்டமாக இன்று பொதுமக்களிடம் இருந்து 10 ஆயிரம் கடிதங்களை வாங்கி அனுப்பி உள்ளோம். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்கள், தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

முன்னதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர், மண்டல தலைவர் ராஜா உசேன், செய்தித்தொடர்பாளர் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 453

0

0