‘பரோட்டாவுக்கு தயிர்பச்சடி எங்கடா’..? ஓட்டல் மாஸ்டருக்கு தர்மஅடி கொடுத்த சகோதரர்கள்… அதிர்ச்சி சிசிடிவி..!!

Author: Babu Lakshmanan
12 August 2023, 5:47 pm
Quick Share

பல்லடம் அருகே ஓட்டலில் பரோட்டாவுக்கு தயிர் வெங்காயம் கொடுக்காததால் பரோட்டா மாஸ்டருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பழனியாண்டி என்பவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஓட்டலில் ராமு என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

மகாலட்சுமி நகரில் குடியிருந்து வரும் செல்வகுமாரின் மகன்கள் அருண் பிரசாத் மற்றும் சஞ்சய் அடிக்கடி இந்த ஓட்டலில் சாப்பிடுவது மற்றும் பார்சல் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி சஞ்சய் பரோட்டா பார்சல் வாங்க கடைக்கு சென்றுள்ளார். பரோட்டாவை மாஸ்டர் ராமு பார்சல் கட்டி கொடுத்துள்ளார். அப்போது, சஞ்சய் பரோட்டாவுக்கு தயிர் வெங்காயம் கேட்டுள்ளார். மாஸ்டர் ராமு தயிர் வெங்காயம் இல்லை என அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. அப்போது மாஸ்டர் ராமுவிற்கும், சஞ்சய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் மாஸ்டர் ராமு சஞ்சயை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சஞ்சய் நடந்தவற்றை தனது அண்ணன் அருண் பிரசாத்திடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து ஓட்டலுக்கு தனது தம்பியுடன் வந்த அருண் பிரசாத், தனது தம்பியை தாக்கிய ராமுவையும், ஓட்டலின் உரிமையாளர் பழனியாண்டியையும் விறகு கட்டை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

தற்போது அருண் பிரசாத் பரோட்டா மாஸ்டரையும், ஓட்டல் உரிமையாளரையும் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 278

0

0