நண்பரை கடத்தி ரூ.3 லட்சம் அபேஸ் செய்ய முயற்சி… தப்பியோடிய நபரை பொதுமக்கள் உதவியால் மடக்கி பிடித்த போலீஸ் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 9:31 pm
Quick Share

நண்பரை கடத்தி ரூ.3 லட்சம் அபேஸ் செய்ய முயற்சித்த நபர், தப்பியோடிய போது பொதுமக்கள் உதவியுடன் துரத்திப்பிடித்த போலீஸாரின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணப்பாளையத்தை சேர்ந்த கௌதம். இவர் கள்ளிமேடு போலீஸ் கார்டன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி திருப்பூரில் உள்ள சமோசா கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம் ரோடு மகாலட்சுமி நகர் பகுதியில் இவருக்கு ஏற்பட்ட சாலை விபத்திற்காக 22 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் தொகை கிடைத்துள்ளது. அந்த பணத்தை திருப்பூர் பிக்பஜார் வளாகத்தில் உள்ள யூனியன் வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார், ராஜு ஆகிய இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே கௌதமிடம் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். விபத்து காப்பீட்டு தொகை கௌதமின் வங்கி கணக்கில் இருந்ததை அறிந்து கொண்ட ராஜேஷ்குமார் மற்றும் ராஜு ஆகியோர், மேலும் 4 நபர்களை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு கௌதம் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

6 பேரும் சேர்ந்து கௌதமை மகாலட்சுமி நகர் பகுதிக்கு கடத்திச் சென்று கத்தி முனையில் கௌதமை மிரட்டி 3 லட்சம் ரூபாய்க்கு காசோலை எழுதி தரச் சொல்லி மிரட்டி உள்ளனர். கௌதமும் காசோலையில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். ராஜு, வெங்கடேஷ் அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 3 பேரும் நேற்று காலை திருப்பூரில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் காசோலையை செலுத்தி பணம் பெறுவதற்காக சென்று உள்ளனர்.

சாதூரியமாக அவர்களிடம் இருந்து தப்பித்த கௌதம் உடனடியாக இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். கௌதமை கடத்தி பணம் பறிக்க முயன்ற நபர்கள் வங்கிக்கு சென்றுள்ளதை அறிந்த பல்லடம் போலீசார் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். வங்கிக்கு விரைந்து சென்ற சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் நாகேந்திரன், திருப்பூர் தெற்கு காவல் நிலைய காவலர் மதன் ஆகியோர் அவர்களை சுற்றிவலைத்தனர்.

அப்போது, பிரகாஷ் என்பவர் தப்பி ஓடிய போது சுதாரித்துக்கொண்ட போலீசார் பொதுமக்களின் உதவியோடு பிரகாஷை சினிமா பானியில் துரத்தி பிடித்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு பிடிபட்டவர்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பிஓடிய குற்றவாளியை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் துரத்திப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவில் பதிவாகியிருந்தது தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் தப்பி ஓடியவரை துரத்திப்பிடித்த போலீஸின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

Views: - 279

0

0