எலக்ட்ரானிக் கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி.. காட்டிக் கொடுத்த சிசிடிவி… வசமாக சிக்கிய வடமாநில சகோதரர்கள்…!!

Author: Babu Lakshmanan
1 July 2023, 7:39 pm
Quick Share

திருப்பூர் ; பல்லடம் அருகே எலக்ட்ரானிக் கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் கல்யாண். இவர் அவினாசிபாளையத்தை அடுத்த கொடுவாய் பகுதியில் மொபைல், லேப்டாப், கார் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்ற அவர் நேற்று காலை வழக்கம் போல கடைய திறக்க வந்துள்ளார். அப்போது கடையிம் ஷட்டரின் இரண்டு பக்க பூட்டுக்களும் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையிம் எந்த பொருட்களும் திருடு போகவில்லை.

அதனை தொடர்ந்து, கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்த போது முகத்தை துணியால் மூடிய படி இரண்டு வாலிபர்கள் கடையின் ஷட்டரின் பூட்டை உடைப்பது தெரியவந்தது. ஷட்டரின் நடுவில் இருக்கும் பூட்டை அவர்கள் உடைக்க முயற்சிப்பதும், அதனை உடைக்க முடியாததால் அவர்கள் திரும்பி சென்றதும் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதனை தொடர்ந்து கல்யாண் அளித்த புகாரின் அடிப்படையில் அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்யாணின் கடைக்கு வந்த வடமாநில வாலிபர்கள் இருவர் ஒரு செல்போனை சர்வீஸ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

போனை வாங்கி கொண்ட கல்யாண் அவர்களிடம் இருந்து ஆதார் கார்டு நகலையும் பெற்றுள்ளார். அதனை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் ஒரிசாவை சேர்ந்த ஹரிநாயக் (22), பிர்ந்தா நாயக் (20) என்பதும் இருவரும் சகோதரர் என்பதும் தெரியவந்தது. மேலும், கொடுவாய் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. கொடுவாய் மற்றும் அவினாசிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கும் அதில் தொடர்புள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 277

0

0