மாணவியின் புகைப்படத்தை அரைநிர்வாணமாக சித்தரிப்பு… : வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்த சக மாணவன்… விசாரணையில் பகீர்..!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 4:54 pm
Quick Share

திருவாரூர் ; கல்லூரி பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அரை நிர்வாணமாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கரும்பியூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ் (19). இவர் நாகப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஆகாஷ்ராஜ் பள்ளியில் படிக்கும்போது, அவருடன் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆகாஷ்ராஜ் பலமுறை அந்த மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தியும், அதற்கு அந்த மாணவி ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு மாணவி மற்றொரு கல்லூரியில் ஒன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

தொடர்ந்து மாணவி தன்னை காதலிக்கவில்லை என்கிற கோபத்திலிருந்த ஆகாஷ்ராஜ், அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வேறொரு அரை நிர்வாண பெண்ணின் உருவத்துடன் பொருத்தி, அதனை வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், இந்த செயலில் ஈடுபட்டது ஆகாஷ்ராஜ் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து அவரிடம் விசாரித்த போது தொடர்ந்து காதலிக்க மறுத்து வந்ததால், அந்தக் கோபத்தில் இவ்வாறு தவறாக பதிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து மாணவர் ஆகாஷ்ராஜ் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

சமீப காலங்களில் சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் பெருகி வருகிறது, குறிப்பாக காதலிக்க மறுக்கின்ற பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே, இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து இது போன்ற குற்றங்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 329

0

0