பெண் காவலருக்கு லிப்ட் கொடுப்பது போல் நாடகம்… சக காவலரின் கொடூர முகம் : காவல் துறை கண்காணிப்பாளர் போட்ட உத்தரவு!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 2:16 pm
Quick Share

திருவாரூர் ; பெண் காவலருக்கு லிப்ட் கொடுத்து உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 22 வயதுடைய பெண் காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், அந்த பெண் காவலர் பணி நிமித்தமாக தஞ்சைக்கு சென்றுவிட்டு இரவு பேருந்தில் திருவாரூருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவருடன் ஆயுத படையில் பணியாற்றும் சற்குணம் (வயது 32) என்பவர் அந்த பெண் காவலரை செல்போனில் தொடர்பு கொண்டு கொரடாச்சேரி பேருந்து நிறுத்ததில் இருந்து மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அதன்படி தன்னுடன் பணிபுரியும் காவலர் அழைத்து செல்வதாக கூறியதால், கொரடாச்சேரி வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி சற்குணத்துடன் அந்த பெண் காவலர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

கொரடாச்சேரியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தண்டலை கிராமம் அருகே சென்ற போது, பெண் காவலரிடம் பாலியல் ரீதியாக சற்குணம் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனா,ல் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவலர் சற்குணத்திடம் இருந்து தப்பித்து, அவருடன் பணிபுரியும் மற்றொரு காவலரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன் பேரில் உரிய விசாரணை நடத்தி பெண் காவலருக்கு உதவுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக சற்குணத்தை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

Views: - 296

0

0