19 வயது காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவி… காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் ; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த பெண்ணின் தாய்!!

Author: Babu Lakshmanan
2 May 2023, 11:43 am
Quick Share

திருச்சி ; 19 வயது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்ட நிலையில், காவல்நிலையத்தில் அவரது தாயார் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா மேலூர் பகுதியில் வசிப்பவர் சுந்தர்ராஜ் – சுமதி. இவர்களது மகள் ஸ்ரீபவானி. இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த கார்த்தி என்பவருடன் ஸ்ரீபவனிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில்
காதலாக மாறி உள்ளது.

இருவரும் ஊரைவிட்டு மாயமான நிலையில் பெண்ணை பெற்றோர் மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், பெண்ணை மீட்டு தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு அளித்துள்ளனர். இந்த நிலையில், நண்பர்கள் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் காதல் ஜோடி இருவரும் சமயபுரத்தில் திருமணம் செய்து கொண்டு, துறையூர் வடக்கு தெரு பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், இதை அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் துறையூர் காவல் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்துள்ளனர் காதல் கணவன் கார்த்திக்கு 19 வயது என்றும், திருமண வயது முழுமையாக நிறைவு பெற வில்லை என்றும் கூறி உள்ளனர்.
இது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக பெண்ணின் பெற்றோர் கூறுகின்றனர்.

இதனிடையே, திடீரென கார்த்தி பெண்ணின் தாய் சுமதியின் கைப்பகுதியில் பலமாக தாக்கினார். அதனால், பெண்ணின் தாயார் கையில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனை அடுத்து, காவல் நிலையம் வாசலில் சுமதி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து, 108 அவசர ஊர்தி மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீபவானியின் தாய் சுமதி அனுப்பி வைக்கப்பட்டார்.

கல்லூரிக்கு செல்லும் பெண்கள் காதல் வலையில் வீழ்வதால் பெற்றோர் படும் துன்பம் மாணவிகளுக்கு தெரியாமல் போகிறது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 403

0

0