‘ரூ.2,000 தான்டா கேட்டேன்’… சுற்றுலா சென்ற இடத்தில் வேன் ஓட்டுநருடன் தகராறு.. இருதரப்பினர் இடையே கடும் மோதல்..!!

Author: Babu Lakshmanan
25 April 2023, 12:29 pm
Quick Share

நாகை ; நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை கொளத்தூரை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தனது உறவினர்கள் 10 பேருடன் ஏலக்குறிச்சி அடைக்கல மாதா கோவில், பூண்டி மாதா கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று விட்டு, இறுதியாக உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அப்பொழுது சுற்றுலா வேனிற்கு பாண்டிச்சேரி பர்மிட் இல்லை என ஓட்டுனர் அசோக்குமார் கூறியுள்ளார். அதற்கு 2000 ரூபாய் கூடுதலாக கட்டணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வாடகை பேசியதாலும், கூடுதலாக கட்டணம் தர முடியாது என ஹரிஹரன் தரப்பினர் கூறியுள்ளனர்.

இதை அடுத்து ஓட்டுனர் தனது வேன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். மேலும், வேளாங்கண்ணி கார் ஓட்டுனர்கள் சங்கத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஹரிஹரன் தங்கியுள்ள விடுதிக்கு சென்று 2000 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஹரிஹரன் தரப்பினர் கார் ஓட்டுனர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சுமார் 20 பேர் கொண்ட கார் ஓட்டுநர்கள் வந்து ஹரிஹரன் தரப்பினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இரண்டு தரப்பிலும் தாக்கிக் கொண்டதில், இரண்டு பெண்கள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார். மேலும், வேளாங்கண்ணி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 279

0

0