விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை ; சொந்த அண்ணன் மகன்களே வெறிச்செயல் ; போலீசார் விசாரணையில் பகீர்..!!

Author: Babu Lakshmanan
25 April 2023, 11:23 am
Quick Share

குன்றத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதிஷ் வயது (29). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். மேலும் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார்.

இன்று அதிகாலை இவரது அண்ணன் மகன்கள் சுகாஷ் (25), சுனில் (22) ஆகிய இருவரும் சித்தப்பாவான அதிஷிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அதிஷை வெட்டினார்கள். அதை தடுக்க வந்த அதீஷின் அண்ணன்கள் முரளி (33), சுகுமார்(38), உள்ளிட்ட மூன்று பேருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் படுகாயம் அடைந்த மூன்று பேர்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கொண்டு செல்லும் வழியில் அதீஷ் பரிதாபமாக இறந்து போனார். அவரது அண்ணன்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினர் அதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவத்திற்கு காரணமான அதீஷின் அண்ணன் மகன்கள் சுகாஷ், சுனில் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக அதீஷின் அண்ணன் மகன்கள் கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 407

0

0