தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது : தமிழக அரசின் முடிவுக்கு திருமாவளவன் போர்க்கொடி…!!

Author: Babu Lakshmanan
19 March 2022, 6:22 pm
stalin - thirumavalavan - updatenews360
Quick Share

சென்னை : தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் கட்சி சார்பில் திருமா பயிலகம் என்னும் பெயரில் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிலகத்தில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு இன்று விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் பயிற்சி வகுப்பு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:- திருமா பயிலகம் என்ற பெயரில் கடந்த 7 ஆண்டுகளாக விசிக சார்பில் கட்சியின் தலைமையகத்தில் அரசு போட்டி தேர்வுகளில் பங்கு பெற மாணவர்களுக்கு இலவச பயிற்சி மையம் நடைபெற்று வருகிறது. அதனை விரிவுபடுத்தி தமிழகம் முழுவதும் 12 இடங்களில் தற்போது பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

விளிம்புநிலை மக்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக பாகுபாடின்றி ஒட்டுமொத்த விளிம்புநிலை மக்களும் அதிகார வலிமை பெற வேண்டும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம்

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிற்போக்கு சக்திகள் திரைத்துறையை கைப்பற்றி வருகின்றன. உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் சமூக நீதியை வளர்த்தெடுக்கும் திட்டமாக இருக்கும். இந்திய சமூகம் சமனற்று இன, மொழி, சாதி, மத, பாலின பாகுபாட்டுடன் உள்ளது, இந்த பாகுபாடுகள் கலைந்து சகோதரத்துவம் வளர வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

Views: - 740

0

0