கணவன் வெளிநாடு செல்ல வரதட்சணை கேட்டு டார்ச்சர்… கைக்குழந்தையை விட்டு விட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…!!

Author: Babu Lakshmanan
17 November 2022, 9:39 am
Quick Share

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பாலாஜி நகரில் வரதட்சணை கொடுமை காரணமாக தனது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி பாலாஜி நகர் வெள்ளைகல்மேடு காங்கேநல்லூர் சாலை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ். இவரது மனைவி சுகன்யா, சென்னையை சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுகன்யா, தனது கணவர் ஆதர்ஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து சுகன்யாவின் தந்தை சந்தான கிருஷ்ணன் காட்பாடி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ஆதர்ஷ் மற்றும் ஆதர்ஷின் அக்கா மம்தா, ஆதர்ஷின் சகோதரர் ஐஸ்வர்யா ஆகியோர் சுகன்யாவிடம் ஆதர்ஷ் வெளிநாடு செல்ல 5 லட்சம் ரூபாய் வேண்டுமென்று வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் நாள்தோறும் கணவன், மனைவி இருவரும் இடையே சண்டையும் சச்சரவும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுகன்யா பாலாஜி நகரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 796

0

0