திறக்க முடியாமல் போன கதவு… திருட சென்ற இடத்தில் தூக்குபோட்டு திருடன் தற்கொலை… வேலூரில் நடந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
6 January 2024, 2:25 pm
Quick Share

திருட சென்ற இடத்தில் திருடன்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் சேண்பாக்கம் ஜீவா தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 45). இவர் வேலூரில் ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு விளையாட சென்றதாக தெரிகிறது.

பின்னர் மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மாயமாகி இருந்தது. மேலும், மற்றொரு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து, தியாகு வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் மர்மநபர் ஒருவர் இருந்துள்ளார். அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தியாகு நீ யார்? என்று கேட்டார். அதற்கு அந்த நபர் உனது உறவினர் என கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தியாகு வெளியே சென்று கதவை பூட்டியுள்ளார்.

மேலும் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும், தனது அம்மாவுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் லட்சுமி இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் கதவை திறந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த அந்த நபர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. போலீசாரின் விசாரணையில், வீட்டுக்குள் தற்கொலை செய்த நபர் திருப்பத்தூர் மாவட்டம் கடாம்பூர் பகுதியை சேர்ந்த பூபதி (45) என்பதும் அவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.

Views: - 769

0

0