கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடூரத் தாக்குதல் : விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உள்பட 9 பேர் கைது

Author: Babu Lakshmanan
16 March 2022, 6:17 pm
Quick Share

சென்னை : பல்லாவரம் அருகே கூலித் தொழிலாளியை சரமாரியாக அடித்து துன்புறுத்தி, கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பாக விஜய் மக்கள் நிர்வாகி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்சர் (எ) அணிஷ். விஜய் மக்கள் இயக்கத்தின் பல்லாவரம் செங்கை (மேற்கு) மாவட்ட தொண்டரணி பொருளாளராக இருந்து வருகிறார். மேலும், பல்லாவரம் பகுதியில் ஐஸ் கடை ஒன்றையும் அணிஷ் நடத்தி வருகிறார். அவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் வேலை செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக பாலாஜிக்கு அணிஷ் ஊதியம் எதுவும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அதேவேளையில், அணிஷின் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 செல்போன்கள் காணாமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது. பாலாஜியும் 3 நாட்கள் வராததால், அவர்தான் செல்போனையும், பணத்தையும் எடுத்திருக்க வேண்டும் என்று அணிஷ் சந்தேகப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, அணிஷ் தனது நண்பர்களை அழைத்துச் சென்று, பம்மல் பகுதியில் இருந்த பாலாஜியை கட்டி வைத்து, உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் பாலாஜி கிழே விழுந்ததும் அங்கிருந்து 9 பேரும் தப்பிச் சென்றார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பாலாஜியை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு 8 தையல் போடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதன்பேரில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகி அன்சர்(எ) அணிஷ் மற்றும் அபிப் ரகுமான், மனோஜ், முகேஷ், ராஜேஷ், மாதவன், சரத், சீனு(எ) பாலகுமார், நிசார் அகமது உட்பட 9 பேருரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 674

0

0