ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிய போலீசார்… தந்தை போட்டோவுடன் கண்கலங்கி நின்ற மாணவி.. மனதை கரையச் செய்யும் காட்சி!!

Author: Babu Lakshmanan
15 September 2023, 9:02 am
Quick Share

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்றிய போது, தந்தை போட்டோவை எடுத்துக் கொண்டு கண்கலங்கி அழுதபடி வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவியின் வீடியோ கண்கலங்கச் செய்துள்ளது.

சிவகாசி பேருந்து நிலையம் எதிரே உள்ள பெத்த மரத்து ஊரணியை தூர்வாரி பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் வருவாய் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை போன்ற பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்பு கட்டிடங்களான 13 வணிக வளாகமும், 2 குடியிருப்பு வீடுகளும் ஜேசிபி எந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பில் இடிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு வீட்டிலிருந்த பள்ளி மாணவி ஒருவர், தனது பள்ளி பை பாட புத்தகங்கள் மற்றும் தனது தந்தையின் போட்டோவை எடுத்துக்கொண்டு கண் கலங்கி அழுதபடி நின்றிருந்தார்.

பெண் போலீசார்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பள்ளி மாணவியை வீட்டை விட்டு வெளியேற்றிய காட்சியை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த சோகமான பரிதாபக் காட்சி இணையதளத்தில் பரவியுள்ளது. இது அனைவரின் கல் மனதையும் கரைத்து கலங்கச் செய்துள்ளது.

Views: - 175

0

0