திருச்செந்தூரில் குழந்தை கடத்தல்… கோவையில் சிக்கிய தம்பதி ; கைதான ஒரு மணிநேரத்தில் பெண் உயிரிழந்ததால் பரபரப்பு

Author: Babu Lakshmanan
9 October 2023, 7:40 pm
Quick Share

குழந்தை கடத்தல் விவகாரத்தில் போலீசாரிடம் சிக்கிய தம்பதியினரில் பெண் குற்றவாளி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜ் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்ற போது, அவரின் ஒன்றரை வயது குழந்தையை கடத்தி சென்றது குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், போலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குழந்தையை திருடியவர்கள் கோவை மாவட்டம் பூண்டி பகுதியில் இருப்பதாக தெரியவந்ததன் பேரில், உடனடியாக கோவை ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் டிஎஸ்பி ராஜபாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி கொண்ட குழுவின் ஆலாந்துறை போலீசார், பூண்டி சாலை முட்டதுவையல் குளத்தேரி பகுதியில் இருந்த, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (43), திலகவதி (35) தம்பதியை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் குழந்தையை திருடியாதாக ஒப்புகொண்ட நிலையில் குழந்தையை சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருப்பதாக கூறி உள்ளனர். பின்னர் ஆலந்துறை போலீசார் சேலம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து குழந்தை இருக்கும் இடத்தை தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ,குற்றவாளியான திலகவதி கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் சேலத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தாரா? அல்லது காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழந்தாரா? என்பது குறித்து காவல்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது திலகவதியின் உடலை கோவை போளுவம்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்துள்ளனர். உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

Views: - 434

1

0