கோபித்துக் கொண்டு சென்ற கணவன்.. வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம் ; இரு குழந்தைகளுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தாய்..!!

Author: Babu Lakshmanan
29 August 2023, 4:47 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தாய் இரண்டு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே தாய் இரண்டு மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு மகன்களை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தி தானும் தற்கொலை கொண்ட சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு, 40 வயதான ஷீபா என்ற மனைவியும், 14 வயதில் கெவின், 7 வயதில் டிசைனா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதில், ஒரு ஆண் குழந்தைக்கு சிறிய அளவில் உடல் குறைபாடு இருந்ததாக தெரிகிறது. இதனால், கணவன், மனைவி இருவருமே மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு ஏசுதாசுக்கும், ஷீபாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டில் இருந்து வெளியேறிய ஏசுதாஸ் வேர்க்கிளம்பியில் உள்ள ஒரு கடையின் திண்ணையில் படுத்துள்ளார். இரவு வீட்டில் மனவருத்தத்தில் இருந்த ஷீபா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை, எடுத்து தன் மீதும் இரண்டு குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், தீக்காயம் அடைந்து அவர்கள் வீட்டில் உள்ளேயே கிடந்துள்ளனர்.

காலையில் குழந்தைகள் சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்க்கும் பொழுது, தீக்காயத்துடன் கிடந்த அவர்களை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீக்காயம் அடைந்த ஷீபாவும் அவரது இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்ற திருவட்டார் போலீசார் தாய் மற்றும் இரண்டு மகன்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 412

0

0