வெளிநாட்டில் கணவன்… பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் ; கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு எடுத்த பெண்.. உறவினர்கள் சாலைமறியல்!!

Author: Babu Lakshmanan
22 November 2022, 2:24 pm
Quick Share

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தற்கொலைக்கு தூண்டிய மூன்று வாலிபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் திருச்சி ஐஜி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை. இவரது மகள் தமிழழகி(26). கடந்த 2019ம் வருடம் இவருக்கும், பெரிய நாயகிபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் பாலமுருகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ஆகாஷ், விக்னேஷ், மணிகண்டன் ஆகிய 3 பேர் தமிழழகிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழழகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணம் அந்த மூன்று நபர்கள் தான் என அவர் கடிதம் எழுதி உள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும், இதன் காரணமாக மேற்கண்ட வாலிபர்கள் பாதிக்கப்பட்ட தமிழழகி குடும்பத்திற்கு தொடர்ந்த மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டி, தமிழழகியின் உறவினர்கள் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகம் முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அவர்களை ஐஜி அலுவலகத்திற்கு மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 439

0

0