சேலையால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற பெண்… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
9 October 2023, 2:40 pm
Quick Share

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டரங்கு முன்பு பெண் ஒருவர் ரிப்பனை கொண்டு கழுத்தை இறுக்கி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சார்ந்தவர் மும்தாஜ் (45.). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர் விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டியை சார்ந்த கண்ணன் என்பவரை காதல் திருமணம் செய்து விருதுநகரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அம்பாசமுத்திரத்தில் இவர்களது தாய் வழி சொத்து தற்போது விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதில் தனக்கும், பங்கு தர வேண்டும் என அவர் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், மாற்று மதத்தவரை காதல் திருமணம் செய்து சென்ற உனக்கு சொத்தில் பங்கு தரமுடியாது என அவரது உடன் பிறந்தவர்கள் மறுத்துள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மும்தாஜ் சொத்தில் தனக்கு பங்கு தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். முன்னதாக, அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்திருந்தார். இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. சொத்தில் மும்தாஜிற்கு எவ்வித பங்கையும் தர உடன் பிறந்தவர்கள் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் மனு நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மும்தாஜ் குறைதீர்க்கும் கூட்டத்தின் அலுவலகம் முன்பாக ரிப்பனை கழுத்தில் கட்டி இறுக்கி தற்கொலை செய்ய முயன்றார். பாதுகாப்பிற்கு நின்ற காவல்துறையினர் உடனடியாக தடுத்து ரிப்பனை கைப்பற்றிய நிலையில், தனது சேலை முந்தானை மூலமாக கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு அவர் முயன்றார்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குறைதீர்க்கும் கூட்ட அலுவலகத்தின் முன்பாக பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 348

0

0