கொலை நகரமாக மாறுகிறதா தலைநகரம்? சென்னை அருகே இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை : 9 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2022, 10:01 pm
Youth Murder - Updatenews360
Quick Share

சென்னை : அம்பத்தூரில் இளைஞர் ஒருவரை 9 பேர் கொண்ட கும்பல் கடத்தி படுகொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் அருகே சண்முகபுரம் இந்திரா நகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 25). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் 7 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இவர் சமீபத்தில் வேப்பம்பட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் தாயைப் பார்ப்பதற்காக சண்முகபுரத்திற்கு வந்திருக்கிறார். அப்போது அவரை 4 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். இந்த தகவலை உதயகுமாரின் தாயார் லதாவிடம் நண்பர் ஜீவா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து லதா அம்பத்தூர் காவல்நிலையத்தில் தனது மகனை கடத்திச்சென்றதாக புகார் அளித்துள்ளார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் கடத்திச்சென்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது உதயகுமாரை கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து போலீசார் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது உதயகுமாரை 9 பேர் கொண்ட கும்பல் ஓடஓட சரமாரியாக தலை, முகத்தில் வெட்டி படுகொலை செய்யும் காட்சிகள் கிடைத்திருக்கிறது.

இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சரண், அப்புன், மாரிஸ் பிரான்க்ளின், எலியா, வினோத் குமார் உள்பட 9 பேரை கைதுசெய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த வாரம் உதயகுமாரின் நண்பர் ஜீவாவை அதே பகுதியைச் சேர்ந்த எலியா, மோசஸ் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதை இவர் தட்டிக் கேட்டதால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த 9 பேரும் உதயகுமாரை கடத்திச்சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 532

0

0