அபராதம் விதித்தால் ஆத்திரம் ; போலீசாரின் பைக்கை சாலையில் வீசி கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
2 March 2023, 12:04 pm
Quick Share

பழனியில் ஓட்டுனர் உரிமம் இன்றி இருசக்கரவாகனத்தில் சென்றவருக்கு அபராதம் விதித்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து வாகனங்களை சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போக்குவரத்து காவல்துறையை சேர்ந்த சார்பு ஆய்வாளர்கள் தியாகராஜன், குமரேசன் மற்றும் காவலர் சுந்தர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது வாகனத்தை ஓட்டிவந்த நபருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாததும், வாகனப்பதிவு புத்தகமும் இல்லாமல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரித்ததில் தனது பெயர் அராபத் என்றும், தந்தை பெயர் சாதிக் என்றும் தெரிவித்துவிட்டு, முகவரியை கூற மறுத்துள்ளார். இதையடுத்து அவரது வாகனத்திற்கு அபராதம் விதித்து போலீசார் ரசீதை கொடுத்தனர்.

தொடர்ந்து ரசீதை வாங்கிச் சென்ற அராபத் சிறிதுநேரத்தில், மேலும் இருவரை அழைத்துக்கொண்டு போக்குவரத்து போலீசாரை தேடி வந்துள்ளார். அப்போது அருகில் இருந்த ஹோட்டலில் சாப்பாட்டு கொண்டிருந்த போலீசாரை கண்டதும், ஹோட்டலுக்குள் சென்று போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து தாக்த முற்பட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து வெளியே வந்தால் கொன்று விடுவோம் என்று கொலை மிரட்டலும் விடுத்த மூவரும், வெளியே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த போக்குவரத்து காவலர்களின் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி சாலையின்‌ நடுவில் இழுத்து போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர போலீசார், சேதமடைந்த இருசக்கர வாகனங்களை மீட்டனர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசாருக்கு கொலைமிரட்டல் விடுத்த மூவர் குறித்தும் விசாரணை நடத்தினர். இதில் தகராறில் ஈடுபட்டவர் பூக்கடை அராபத் என்பதும், மற்ற இருவர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் வாகனங்களை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 376

0

0