மனிதப் பட்டி அமைத்து வாக்காளர்கள் அடைப்பு… திமுக மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!

Author: Babu Lakshmanan
12 April 2024, 6:49 pm
Quick Share

கரூரில் மனிதப் பட்டி அமைத்து வாக்காளர்களை அடைத்து வைப்பதாக திமுக மீது அதிமுக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- மனித பட்டி அமைத்து வாக்காளர்களை அடைத்து வைக்க கூடிய யுக்திகளை திமுக செய்து வருகிறது. வாக்காளர்களை அடைத்து வைத்து காபி, டிபன் எல்லாம் கொடுத்து அடைத்து வைப்பது தான் மனிதப்பட்டி. கிட்டத்தட்ட அது ஒரு மிரட்டல் தான். வேலைக்கு செல்லாமல் காலை முதல் மாலை வரை இருக்க வைப்பது தான் மனிதப்பட்டி.

கரூர் செல்லம்பாளையம், கவுண்டனூர், அரசு காலணியில் எல்லாம் மனிதப் பட்டி இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக புகார் அளித்திருக்கிறோம். இது தொடர்பாக ஆறிடங்களில் இனம் கண்டு ஆறு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது என ஆதாரத்தோடு புகாராக தெரிவித்திருக்கிறோம். அரசும் ஆறு இடங்களில் இதுபோன்று பட்டி அமைக்கப்பட்டிருக்கிறது என அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தனியார் இடத்தில் பட்டா இடத்தில் அமைக்கப்பட்டவை என தலைமை தேர்தல் அதிகாரி இதற்கு விளக்கம் தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க: ‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்… இனி பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டோம்’ ; கூட்டணியை விட்டு விலகிய கோவை மாவட்ட பாமக..?

தேர்தல் நேரத்தில் எந்த கூரை அமைத்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்ட பின்னர் தான் அமைக்க வேண்டும். அங்கு போடப்பட்ட இல்லீகல் செட்டுக்கு அனுமதி பெறப்பட்டதா என்றால் இல்லை. அவ்வாறு போடப்பட்டால் அதற்கு தீயணைப்பு துறையினருடைய தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதில் எதுவும் பெற்றதாக தெரியவில்லை. இவ்வாறு ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மாநில தேர்தல் அதிகாரியிடம் ஒரு புகாரை கொடுத்திருக்கிறோம்.

அதேபோல, கரூரில் ராட்சத லாரிகளை கொண்டு திருட்டுத்தனமாக மணல் அள்ளி, அதில் கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து தேர்தல் நடத்துவதாக ஒரு புகார் வந்தது. அதற்கும் புகார் கொடுத்திருக்கிறோம். அதேபோல, கோயம்புத்தூரில் திமுகவின் பொது கூட்டம் நடைபெற உள்ளது. செட்டிபாளையம் என்ற இடத்தில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில், அண்டை மாவட்டங்களில் இருந்து ஏற்கனவே ஓடுகிற தனியார் பேருந்துகளை மிரட்டி, அதில் மக்களை ஏற்றி வந்து குவிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதுபோன்று பேருந்தை ஆக்கிரமிப்பு செய்வதால் தினந்தோறும் அதை பயன்படுத்தக்கூடிய பயணிகள் பெருமளவில் பாதிப்பு அடைவர். பேருந்துகளை அவ்வாறு தடுத்து நிறுத்துவதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருக்கிறோம்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. பிரச்சாரம் செய்யக்கூடிய இடங்களில் அவரை சுற்றி அதிக கூட்டம் இருக்கக்கூடிய நிலையில் போலீஸ் பாதுகாப்பு குறைவாக உள்ளது. போலீஸ்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான ஊழியர்கள் அல்ல. பேரளவுக்கு ஓரிரு காவலர்கள் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் இதையும் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறேன்.

தேர்தல் ஆணையம் பல் இல்லாத ஆணையம் என ஆயிற்று. ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் தேர்தல் அதிகாரி முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு உரிய பதிலை பெறுவர். சட்ட ரீதியான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும் எனவும் நம்புவதாக தெரிவித்தார்.

Views: - 104

0

0