அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்த திமுகவினர்… அதிகார திமிரோடு கொடூர தாக்குதல் ; இபிஎஸ் கடும் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
14 October 2023, 7:48 pm
Quick Share

அரியலூர் அருகே அதிமுக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய திமுகவினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரியலூர் – செந்துறையில் உள்ள அண்ணா சிலையருகே திமுக அலுவலகமும் மற்றும் அதன் அருகே அதிமுக அலுவலகமு் உள்ளது. இதில் திமுக அலுவலகத்திற்கு செல்லக்கூடிய பாதையின் அருகே டீக்கடை அமைப்பதற்காக அதிமுகவினர் ஷெட் அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திமுக அலுவலகத்தை மறைக்கும் வகையில், அதிமுகவினர் ஷெட் அமைத்துள்ளதாகக் கூறி அதனை திமுகவினர் அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் திமுகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, போலீசார் இருதரப்பினரையும் சமாதானபடுத்த முயன்றபோது, அதிமுகவினர் மீது திமுகவினரும், திமுகவினர் மீது அதிமுகவினரும் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பெரம்பலூர் மாவட்டம் செந்துறையில் ஆக்கிரமிக்கும் நோக்கோடு, அஇஅதிமுக தெற்கு ஒன்றிய கழக அலுவலகத்தை சேதப்படுத்தியும், கழக தொண்டர்கள்
மீது அராஜகத்தின் உச்சமாய், அதிகார திமிரோடு கொடூர தாக்குதல் நடத்தியிருக்கும் மாவட்ட அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் யாருக்கும் பாதுகாப்பற்ற நிலையே தமிழகம் முழுவதும் நீடித்து வருகிறது, பிரதான எதிர்க்கட்சியனர் மீதே எந்த தயக்கமுமின்றி திமுகவினர் கொடூரத் தாக்குதல் நடத்தியிருப்பது அராஜகத்தின் உச்சம், இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறக்கூடாது என கடுமையாக எச்சரிப்பதுடன்,
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது பாராபட்சமின்றி எந்த தயக்கமும் இல்லாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையை வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 249

0

0