எச்சரிக்கை விடுத்த ஜோதிடர்கள்… உடனே பின்வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.. கொள்ளிடம் பாலம் குறித்து இபிஎஸ் சொன்ன ரகசியம்..!!

Author: Babu Lakshmanan
30 December 2023, 2:04 pm
Quick Share

திருச்சி – முக்கொம்பு கொள்ளிடம் புதிய பாலத்தை திறக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவருமான பிரின்ஸ் தங்கவேல் மறைவையொட்டி, முசிறியில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, பிரின்ஸ் தங்கவேல் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, பரஞ்சோதி, சிவபதி, விஜயபாஸ்கர், வளர்மதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :- வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சென்னை, தூத்துக்குடி கனமழை குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.

முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் மனித உயிர்கள், கால்நடைகளை இழந்துள்ளோம். அதிமுக செய்திகளை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன. தமிழக மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அதனை கருத்தில் கொள்ளாமல் திமுக சார்பில் இண்டியா கூட்டணியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்று விட்டார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்கனவே ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் எந்த பயனும் ஏற்படவில்லை. ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் உலக முதலீட்டாளாக மாநாடு நடைபெற்றது. அதன் மூலம் முதலீட்டாளர்கள் முதலீடு ஈர்க்கப்பட்டது. தற்போது மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினால் பயன் என்றும் கிடைக்காது. திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை.

மழை வெள்ளம் காரணமாக திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பாலம் இடிந்தது. எனவே அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரையில் அதிகாரப்பூர்வமாக பாலத் திறப்பு விழா நடைபெறவில்லை. புதிய பாலத்தை திறந்தால் உங்களுக்கு (ஸ்டாலினுக்கு) ஆபத்து நேரும் என ஜோசியர்கள் எச்சரித்து இருப்பார்கள். எனவே பயம் காரணமாகவே பாலம் திறக்கப்படவில்லை, என தனக்கே உரிய பாணியில் நக்கலடித்தார்.

Views: - 329

0

0