முதலமைச்சரின் தங்கை கைது.. பேருந்துக்கு தீவைத்து கொளுத்தியதில் வெடித்த மோதல் ; அரசியலில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
29 November 2022, 1:00 pm
Quick Share

இருகட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா. இவர் தெலங்கானாவை மையமாக வைத்து ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்னும் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து, தனது கட்சியை விரிவுபடுத்தும் விதமாக, அவர் தெலங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இந்த பாதயாத்திரையின் போது ஆளும் கட்சியான டிஆர்எஸ் மற்றும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தி வருகிறார். இதனால், டிஆர்எஸ் கட்சி தொண்டர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். டிஆர்எஸ் கட்சி நிர்வாகிகளும் ஷர்மிளாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வாரங்கலில் நேற்று முன்தினம் இரவு, ஷர்மிளா பயன்படுத்தும் கேரவான் பேருந்தை தீவைத்து கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது அவர் பேருந்தில் இல்லாததால் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் இரு கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இது குறித்து பேசிய ஷர்மிளா, “பாத யாத்திரையை நிறுத்தவே பேருந்தை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தீயிட்டு கொளுத்தி பயமுறுத்துகிறார். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். எனது பாத யாத்திரை தொடரும்” என கூறினார்.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, அவரது பாத யாத்திரையை தடுத்து நிறுத்தும் வகையில், வாரங்கல் மாவட்டம், சின்னராவ் பேட்டா என்ற இடத்தில் வைத்து ஷர்மிளாவை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இது தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 343

0

0