விரைவில் முக்கிய அரசியல் மாற்றம் நிகழும்…. சரித்திரத்தில் இதுபோன்ற நடந்திருக்க வாய்ப்பே இல்லை ; அண்ணாமலை சூசகம்!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 1:54 pm
Quick Share

என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு தமிழகத்தில் முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான பணிகள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருவதை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற உள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு எழுச்சி விழாவாக இருக்கும். 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்பு தமிழகத்தில் எத்தனையோ அரசியல் மாற்றம் நிகழ்ந்திருந்தாலும், இந்த மாநாட்டிற்கு பிறகு முக்கிய அரசியல் மாற்றம் நிகழும். தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வர உள்ளனர்.

தொண்டர்களின் உற்சாகம் எங்களுக்கு மேலும் நம்பிக்கை ஊட்டுகிறது. தேசியம் மற்றும் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உள்ள மக்களை கொண்ட கோவை நாடாளுமன்றத் தொகுதியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. திருப்பூரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்கள் திருப்பத்தை தந்து இருக்கிறது. அதுபோன்று என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

வருகின்ற 27, 28 மட்டுமல்லாது மார்ச் முதல் வாரமும் தமிழகத்திற்கு பிரதமர் வருகை உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பும், பின்பும் பிரதமர் தொடர்ச்சியாக தமிழகம் வருவார். சரித்திரத்தில் இது போன்ற நிகழ்வு நடந்திருக்காது என்பதற்குச் சான்றாக இந்த நிகழ்வு அமைய இருக்கிறது, என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Views: - 193

0

0