சனாதனத்தை எதிர்க்கும் திமுக… அமாவாசையை பார்த்து மகளிருக்கு ரூ.1000 கொடுத்த CM ஸ்டாலின் ; அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
15 September 2023, 11:38 am
Quick Share

ரூ.1000 உரிமைத் தொகை கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் பெண்கள், சொத்துவரி, மின்கட்டண உயர்வுகளை மறந்து விடக் கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் யாத்திரையை துவங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் இருந்து ஸ்கிரீன் ரோடு, திருவள்ளுவர் சாலை, கணேஷ் தியேட்டர் சோலைகள் ரோடு, கிழக்கு வீதி வழியாக யாத்திரை மேற்கொண்டார். இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்ப்பதற்கு பெண்கள் குழந்தை என ஏராளமானோர் காத்திருந்தனர். மேலும், வரும் வழியில் திண்டுக்கலுக்கு பிரசித்தி பெற்ற பூட்டை அண்ணாமலைக்கு பரிசாக வழங்கினர்.

இறுதியில் மேடைக்கு வந்த அவர் பேசியதாவது :- 70 ஆண்டுகளாக ஒரு குடும்பத்திற்கான அரசியலாக தான் இருந்து வந்துள்ளது. மூன்றாம் தலைமுறையாக திராவிட அரசியல் உள்ளது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என மூன்று தலைமுறைகளை பார்த்துள்ளனர். எனவே. ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர்.

படிப்பிற்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ப ஊதியம் என்பதையே எதிர்பார்க்கின்றனர். சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் ஒரு குடும்பத்தில் பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக அரசியலில் உள்ளனர். இதை உடைத்து காட்டப்போகிறோம். மாற்றம் வேண்டும் என்ற குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. உழைக்கும் வர்க்கம் அதிகமாக உள்ள ஊர் திண்டுக்கல்.

ஒரு காலத்தில் திண்டீஸ்வரம் என அழைக்கப்பட்டது. பிற மாநிலத்தில் கூட திண்டுக்கல் என்றால் பூட்டு என மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பூட்டு என்றால் ஒரு வார்த்தை இல்லை. அது நம்பிக்கை. வரும் வழியில் இரண்டு பூட்டுக்களை கொடுத்தார்கள். ஒன்று திமுகவிற்கு பூட்டு போடுங்கள். இரண்டு காங்கிரஸ்க்கு பூட்டு போடுங்கள் என்றனர்.

திமுக குடும்ப ஆட்சியில் இருக்கும் ஒருவருக்கும், காங்கிரஸ் குடும்பத்தில் ராகுலுக்கும் பூட்டுபோடவேண்டும். வெளிநாட்டுக்கு போய் இந்தியா மீது குற்றச்சாட்டு வைப்பவர். கஷ்டம் என்றால் என்ன என்பதே தெரியாதவர். திப்பு சுல்தானால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை. ஆனால், அறியா குழந்தை பேசியதற்காக இரண்டாவது பூட்டு போடவேண்டும்.

இந்தியாவை பற்றி தவறாக பேசும் ராகுல்காந்தி, இந்து தர்மத்தை பற்றி தவறாக பேசும் உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு போடவேண்டும். 2019ல் புவிசார் குறியீடு கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. சந்திராயன் 3 க்கு டெலிகமெண்ட் சாப்ட்வேர் எழுதியவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவுரிமணி ராமராஜன். இதனால் திண்டுக்கல்லுக்கு பெருமை. ஐபோன் நிறுவனம் தனது புதிய போனை வெளியிட்டுள்ளனர். அதில் பயன்படுத்துவது நாம் விண்வெளிக்கு அனுப்பிவைத்த சேட்டிலைட் மூலம் ஜி.பி.எஸ்., நமது மூதாதையர் காலத்தில் இந்தியா தான் முதல் நாடு என இருந்தது.

2022 முதல் 2047 வரை 25 ஆண்டுகள் இந்தியாவின் ஆண்டு. 2047 இந்தியா உலகில் முதன்மை நாடாக மாறும். ஏழைகளின் முன்னேற்றத்திற்காக முதல் ஐந்து ஆண்டுகள் நடந்தது. அடுத்த ஆண்டு உள்கட்டமைப்புக்காக நடந்துள்ளது. 2024 முதல் 2031 வரை தனிமனித பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். 9 ஆண்டுகளில் தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது.

ஆட்சிக்கு வந்தபோது உலகில் 11 வது பொருளாதார நாடாக இருந்ததோம். தற்போது 5 வது நாடாக உள்ளது. அடுத்து ஜப்பான், ஜெர்மனியை முந்தி 3வது இடத்திற்கு செல்ல வேண்டும். நாட்டில் ஊழல் இருந்ததால் இந்த நாடு முன்னேற முடியவில்லை. லஞ்ச லாவண்யம் இல்லாமல் மத்திய அரசு நடக்கிறது. பிரதமர் உள்ளிட்ட 79 மத்திய அமைச்சர்கள் அனைவரும் நேர்மையாக உள்ளனர்.

ஜாதியை வைத்து அரசியல் செய்தது, பணத்தை வைத்து அரசியல் செய்தது ஒரு காலம். ஊழல் இல்லாமல் இருக்கும் அரசியல்வாதிக்கு தான் எங்கள் ஆதரவு என பெண்கள் வரவேண்டும். விடுப்பு எடுக்காமல் யாரும் வேலை செய்வதில்லை. 23 ஆண்டுகள் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்துள்ளார். பா.ஜக பற்றி புரிந்துகொள்ள திமுகவிற்கு வாய்ப்பில்லை.

மகளிர் உரிமைத்தொகை அமாவாசை அன்று ஒரு ரூபாய் போட்டு துவக்கியுள்ளனர். உள்ளே ஒன்று வைத்துக்கொண்டு வெளியே பேசுவது. 2.25 கோடி குடும்ப அட்டை உள்ளது. ஒரு கோடியே ஆறு லட்சம் பேருக்கு மட்டும் மகளிர் உரிமைத்தொகை வழங்குகிறார்கள். திமுகவிற்கு மூன்று குறிக்கோள் தான். சாராயத்தை விற்போம். சனாதனத்தை ஒழிப்போம். தேர்தல் வரும்போது பல்டி அடிப்போம்.

சனாதனம் என்றால் அகிம்சையை நினைக்ககூடியவர்கள் பின்பற்றும் தர்மம். நரேந்திரமோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பத்து ஊழல்களை பட்டியல் இட்டு ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளோம். உண்மையான திருடன் திமுக. ஊழலுக்கு இலக்கணமாக இருக்கும் திமுகவை 2024 மக்களவை தேர்தலில் வேரோடு அறுத்து எரியவேண்டும்.

இன்னைக்கு சில பெண்கள் சந்தோஷமாக இருக்கலாம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்துவரி, மின்கட்டணம், பத்திரப்பதிவு என பல கட்டணங்களை உயர்த்திவிட்டனர். ஆயிரம் வந்தது என நினைத்து விடவேண்டும். 2024 உங்களுக்கான தேர்தல் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கான தேர்தல். ஊழல் இல்லாத இந்தியாவை முழுமையாக பார்க்கவேண்டுமா..? அதற்கான தேர்தல், என்றார். இறுதியில் கிரைன் உதவியுடன் ராட்சச மாலையை அணிவித்தனர்

Views: - 238

0

0