முடியை பிடித்து இழுத்து கேவலமான செயல்… காவல்துறை மீது தீண்டாமை வழக்குப்பதிவு செய்க ; ஆவேசமான நயினார் நாகேந்திரன்…!!

Author: Babu Lakshmanan
31 August 2023, 7:07 pm
Quick Share

நியாயத்திற்காக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உயிரிழந்த ஜெகன் உறவினர்கள் மீது காவல்துறை அத்துமீறி நடந்துள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் ஜெகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாளையங்கோட்டை திருச்செந்தூர் சாலையில் உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி சாலையின் ஓரத்தில் காவல்துறையினர் கொண்டு விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மூளிக்குளம் ஊர் முகப்பு முன்பு உயிரிழந்த ஜெகனின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியில் தெரிவித்ததாவது:- இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் நியாயம் கேட்டு ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்றும் பாராமல் போலீசார் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி இழுத்து சென்றுள்ளனர்.

முடியை பிடித்து இழுத்து மட்டமான கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர காவல் துறை கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளது. உயிரை பறிகொடுத்தவர்கள் நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காவல்துறையினரின் இந்த செயல் மிக மட்டமானது. நியாயத்திற்காக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது காவல்துறை அத்துமீறி நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

உயிரிழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி அனைவருக்கும் தண்டனை பெற்று தர வேண்டும். குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் போராட்டம் நடத்தியவர்கள் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் காவல்துறையினர் நடந்து கொண்டுள்ளனர்.

ஞாயம் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடந்த செயலை பார்த்தால் இந்த வழக்கு விசாரணை நடக்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். காவல்துறையினரின் மனதை தூண்டி நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும், என தெரிவித்தார்.

Views: - 242

0

0