ரூ.37 ஆயிரம் கோடி கேட்டோம்.. இதோ தரேன்.. தரேன்னு சொன்னாங்க.. ஒரு பைசா கூட வரல : மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan21 January 2024, 7:59 pm
ரூ.37 ஆயிரம் கோடி கேட்டோம்.. இதோ தரேன்.. தரேன்னு சொன்னாங்க.. ஒரு பைசா கூட வரல : மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு!
சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவுப் பேருரையாற்றினார். அவர் பேசுகையில், “தெற்கில் விடியல் பிறந்தது போல விரைவில் இந்தியா முழுவதும் விடியல் பிறக்கும் உதயநிதி மக்கள் பணிகளில் எனக்கு துணையாக இருக்கிறார், எனக்கு 30 வயதாக இருக்கும் போது இளைஞரணி கட்சியில் அமைக்கப்பட்டது. தற்போதும் வீறுகொண்டு சிறப்பாக செயல்படுகிறது.
இளைஞரணி மீது எனக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு. அது தான் என்னை இந்த தாய் தமிழ்நாட்டை ஆள உதவியிருக்கிறது, நான் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க காரணம் என்னை சுற்றி எப்போதும் இளைஞர்கள் இருப்பது. இளைஞரணி தம்பிமார்களே நீங்களும் நாளை எம்.எல்.ஏவாகவும், அமைச்சர்களாவும், மாவட்ட செயலாளர்களாகவும் வர வேண்டும்.
ஒரு காலத்தில் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான் பிரதமர் மோடி ஆனால் தற்போது மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டவைகளுக்கும் மத்திய அரசு சட்டம் இயற்றி வருகிறது. எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை என கூறினார்.
சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரின் போது 37000 கோடி பணம் கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை. பிரதமர் வந்தார் தருவேன்னு சொன்னார், நிதியமைச்சர் வந்தார் தருவேன்னு சொன்னார், பாதுகாப்பு துறை அமைச்சர் வந்தார் தருவேன்னு சொன்னார் இப்ப வரைக்கும் ஒன்னும் வரல, 40-ம் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்துடன் நாளை முதல் புறப்படுங்கள், நம்முடைய நோக்கம் இந்தியா கூட்டணியை வெல்ல வைப்பது.
உதயநிதி மட்டுமல்ல நீங்கள் அனைவருமே என் மகன் தான், உங்கள் அனைவரையும் கட்சியின் வாரிசுகளாகவே பார்க்கிறேன். சேலத்தில் சூளுரைப்போம், இந்தியா கூட்டணி வெல்லட்டும்” என பேசினார்.
0
0