கரூரில் தொடரும் திமுக – காங்., மோதல்… அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்ற கோவில் திருவிழாவில் காங்., பெண் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு… தடுப்புவேலி ஏறிகுதித்த ஜோதிமணி…!!

Author: Babu Lakshmanan
26 May 2022, 11:43 am
Quick Share

கரூர் மாரியம்மன் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்டதால், பொறுமை இழந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தடுப்புவேலி ஏறி குதித்து சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.

தமிழக அளவில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் விமர்சையான ஆலயங்களில் ஒன்று கரூர் மாரியம்மன். இந்த ஆலயத்தின் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் திமுக மாநகர உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு மட்டுமே இந்நிகழ்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

மேலும், கரூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து அம்மனின் கம்பம், கச்சேரி பிள்ளையார் ஆலயத்தின் வழியாக கரூர் ஐந்து ரோடு அமராவதி ஆற்றிற்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும், திமுக பிரமுகர்கள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் என்று ஏராளமானோர் வழிநெடுகிலும் விஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் போல சென்றனர்.

ஏற்கனவே இந்த திருவிழாவிற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல், இந்த திருவிழாவிற்காக கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டிருந்தனர். கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்காக இரும்பு கம்பி வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் கூறினால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் என்று பசுபதிபாளையம் ஆய்வாளர் செந்தில்குமார் கூறிய நிலையில், காத்திருந்த பத்திரிக்கையாளர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கான அனுமதி அட்டையுடன் காத்திருந்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதுமட்டுமில்லாமல், சில மணி நேரம் காத்திருந்த கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பொறுமைக்கொரு எல்லை உண்டு என்கின்ற விதத்தில், கம்பிவேலிகளை தாண்டி குதித்தார். ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சியில் முழுக்க, முழுக்க திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மட்டுமல்லாமல், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டனர். செய்தி சேகரிப்பதற்காக பாஸ் வழங்கப்பட்ட செய்தியாளர்கள் யாரையும் இந்நிகழ்ச்சியில் அனுமதி அளிக்கபடவில்லை.

ஏராளாமான நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர உள்ள திராவிட மாடல் ஆட்சியில், எண்ணங்களை பிரதிபலிக்கும் செய்தியாளர்களுக்கும், கூட்டணி கட்சியினை சார்ந்த ஒரு பெண் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கும் அனுமதி மறுத்துள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சி மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 827

0

0