மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சிதான் ; திமுக வேட்பாளர் கனிமொழி குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
15 April 2024, 12:09 pm
Quick Share

அரசியல் லாபத்திற்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி மக்களைப் பிரிக்கக்கூடிய கட்சி பாஜக என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல்19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்செந்தூர் அருகேயுள்ள காயல்பட்டணம் நகராட்சியில் உள்ள கீழ லட்சுமிபுரம் வாட்டர் டேங்க், ஓடக்கரை, காயிதே மில்லத் நகர் சந்திப்பு, ரெட் ஸ்டார் சங்கம் அருகில், YUFசங்கம் கார்னர், சேதுராஜா தெரு சந்திப்பு, கோமான் மேலத் தெரு, பெரிய சதுக்கை சந்திப்பு, உச்சிமாகாளியம்மன் கோவில் தெரு சந்திப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் படிக்க: ‘இதை விட வேற சான்ஸ் கிடைக்காது’… இன்று கிடுகிடுவென குறைந்தது தங்கம் விலை ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி கூறியதாவது :- மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு சர்வாதிகார நாடக மாறிவிடும். சிஏஏ சட்டத்தின் மூலமாக மக்களைப் பிரிக்க நினைக்கும் பாஜக அரசிற்கு இந்த தேர்தலில் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்.

பாஜக அரசு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றுவது கிடையாது. மதச்சார்பற்ற நாடாக இந்த நாடு உருவாக வேண்டும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பதை நிரூபிக்கக் கூடிய தேர்தல் இந்த தேர்தல். சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு இலையைக் கூட கிள்ளி போடாத பாஜக இந்த நாட்டில் தேசபக்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க: ‘மைக், லைட் ஆஃப் பண்ணியாச்சு’.. நள்ளிரவில் அண்ணாமலை வாக்குவாதம்… சூலூர் போலீசார் வழக்குப்பதிவு

மோடி மீண்டும் ஆட்சியில் வந்தால் சர்வாதிகாரம் தான் நடக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற மாட்டார். ஆனால் அதானி, அம்பானி போன்றவர்களுக்கான வாக்குறுதியை மட்டும் தான் நிறைவேற்றுவார். கேஸ் சிலிண்டருக்கு மானியம் கொடுக்கிறேன் என்று சொன்ன மோடி அதனை நிறைவேற்றவில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ஆகக் குறைக்கப்படும், பெட்ரோல் 75, டீசல் 65 ரூபாயாகக் குறைக்கப்படும் எனக் கூறினார்.

தமிழகத்தில் மழை வெள்ள காலத்தின்போது மோடி வந்து பார்க்கவும் இல்லை. இன்று வரை ஒரு ரூபாய் கூட தமிழக அரசிற்கு நிதி வழங்கவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 6 ஆயிரம், வீடு இழந்தவர்களுக்கு ரூ. 4 லட்சம் அதே போல் பாதிப்படைந்தவர்களுக்கு உதவித்தொகை ஆடு மாடுகளுக்கு உயிரிழப்பு தொகை, விவசாயிகள் வியாபாரிகளுக்கு இழப்பீட்டுத் தொகை எனப் பல உதவிகளையும் மாநில அரசின் சார்பில் நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.100 நாள் வேலை150 நாளாக உயர்த்தி, சம்பளம் ரூ. 400 வழங்கப்படும். இது எல்லாம் செய்வதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்து மீண்டும் உங்களுடன் பணியாற்ற ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

Views: - 181

0

0