மோடி ஒரு டுபாக்கூர்…. அண்ணாமலை ஒரு தவளை ; மிமிக்ரி செய்து பாஜகவை விமர்சித்த திண்டுக்கல் லியோனி..!!!

Author: Babu Lakshmanan
4 April 2024, 8:25 am
Quick Share

ஒற்றை விரலை வைத்து ஓங்கி அடித்து விடுவேன் என்று பிரச்சாரம் செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறிய திண்டுக்கல் லியோனி, ஒற்றை விரலை வைத்து ரசம் சோறு கூட திங்க முடியாது என்று கிண்டல் செய்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் திண்டுக்கல் ஐ லியோனி பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க: ஓட்டு கேட்க வராதீங்க…ரவுண்டு கட்டும் பொதுமக்கள்… திக்கு முக்காடும் திமுக அரசு!

சங்கே முழங்கு என பாடலை பாடியவாறு திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் பிரச்சாரத்தை துவங்கிய திண்டுக்கல் ஐ லியோனி, சென்ற முறை தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்த ஒரே வேட்பாளர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேலுச்சாமி என்றும், சிறுவயதில் மேட்டுப்பட்டி பகுதியில் லியோனி நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு சிரிப்பலைகளோடு பிரச்சாரத்தை துவங்கினார்.

மகாராஜாவே என கூறி மோடி பற்றி கதை கூற ஆரம்பித்து, வட இந்தியாவிலிருந்து நரேந்திர மோடி என்பவரை நான் அழைத்து வந்திருக்கிறேன். அந்த நரேந்திர மோடி என்பவர் என்ன செய்தார், மகாராஜாவே அவர் என்னென்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அடுத்த திருவிழாவே வந்து விடும். பத்து ஆண்டுகள் இந்த நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் டுபாக்கூர் வேஷம் போடும் ஒருவர் தான் நரேந்திர மோடி மகாராஜாவே.

அம்பானி, அதானி போன்ற பணக்காரர்களை பிடித்துக்கொண்டு உலகத்தை சுத்தி வருகிறார். மகாராஜாவே சிலிண்டர் விலையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி நமது பெண்களை சமைக்க விடாமல் செய்தவர்தான் நமது நரேந்திர மோடி மகாராஜாவே. நரேந்திர மோடி ஆட்சி செய்யும் மணிப்பூரில் மலை சாதி இரண்டு பெண்களின் நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்வதற்கு காரணமாக இருந்தவர் நரேந்திர மோடி.

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது வராத நரேந்திர மோடி, தற்போது ஆறுமுறை வந்துள்ளார். இந்த நரேந்திர மோடிக்கு நாம் கொடுக்கும் தண்டனை என்னவென்றால், இனிமேல் இந்தியா பக்கம் இருக்க மாட்டார். இந்தியாவில் அவர் ஆட்சிக்கு வர முடியாது. மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி தான், இந்தியா கூட்டணி இந்தியாவில் வெற்றி பெறும்.

இன்றைக்கு நரேந்திர மோடி தமிழகத்திற்கு ஆறாவது முறையாக வரப்போகிறார். அவர் நடத்துவதற்கு பெயர் என்னவென்றால், ரோடு சோ. சோ என்றால் காட்சி. ஐந்து முறை நரேந்திர மோடி தமிழகம் வந்து லேகியம் வித்துவிட்டு சென்றுள்ளார்.

பெண்களைப் படிக்க வைத்து அழகு பார்த்த ஆட்சி நமது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்து கொண்டிருக்கும் ஆட்சி நரேந்திர மோடி பெண்களுக்காக என்ன செய்தார் என்றால் பெண்களுக்காக ஒரு திட்டம் வைத்துள்ளார் நாறி வந்தன் யோஜனா என்று கூறி, பெண்களை முன்னேற்றும் திட்டம். அதேபோல், மற்றொரு திட்டம் இந்தியாவின் பெண்களை மகள்களாக நினைக்கும் திட்டம்.

மேலும் படிக்க: ஒன்றிய அரசு அல்ல.. ஒன்றாத அரசு : அதனால்தான் திருமாவுடன் தோள் உரசி நிற்கிறேன்.. பரப்புரையில் #KamalHaasan பேச்சு!

நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழியை உண்மையிலேயே நேசிக்கிறீர்கள் என்றால், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவித்தால், நீங்கள் உண்மையாக தமிழை நேசிக்கிறீர்கள் என்று ஏற்றுக் கொள்கிறோம். தமிழ் மொழிக்கு 60 கோடி ரூபாய் தான் நிதி கொடுக்கிறீர்கள். ஆனால் அதே போல், சமஸ்கிருதம் இந்தி மொழிகளுக்கு 1300 கோடி ரூபாய் நிதியை கொடுத்துட்டு, தமிழ் மொழிக்கு அதுல பத்துல ஒரு பங்கு நிதியை கொடுத்துட்டு, ஐ லவ் தமிழ் பீப்பிள் ஐ லவ் தமிழ் கல்ச்சர் அப்படின்னு டுபாக்கூர் விடுகிறார்.

நம்ம அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி இருக்காருல, ஐயோ ஐயோ அதிமுக காரர்கள் எல்லாம் டீக்கடையில் உட்கார்ந்து அண்ணன் என்ன பண்றாரு, யாருடா ஆதரிக்கிறாரு. அவர் யாரை ஆதரிக்கிறார் என்று அவருக்கே தெரியல. அப்புறம் எப்படிடா நமக்கு தெரியும். மோடியை ஆதரிக்கிறாரா..? எதிர்க்கிறாரா..? மாப்பிள, அதைத்தான் இவ்வளவு நாள் யோசிச்சிகிட்டு இருக்கான். நம்மனால கண்டுபிடிக்க முடியல.

எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் என்ன சொல்கிறார் என்றால், ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று கூறி கிண்டல் செய்த லியோனி, உண்மையிலேயே அவர் பிரச்சாரம் சரியாகத்தான் செய்கிறார். அவரிடம் ஒரு விரல் தான் இருக்கிறது, அவர்கிட்ட இருக்கிற அஞ்சு விரல்ல, கட்டைவிரல் ஜெயலலிதா அம்மா இழந்துவிட்டார். நடுவிரல் சின்னம்மா சசிகலா, அதையும் இழந்துவிட்டார். மோதிர விரல் ஓபிஎஸ் 11 எம்எல்ஏ உடன் ஆதரவு கொடுத்தவர், அதையும் இழந்துவிட்டார். கடைசியாக ஆதரவு கொடுத்த பாஜக அதையும் இழந்துவிட்டார் என சுண்டு விரலை காட்டினார். இப்போது, ஐயா கையில் ஒரே ஒரு விரல் மட்டும் தான் இருக்கிறது.

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று கூறி வருகிறார். ஒரு விரலை வைத்துக் கொண்டு இன்று ரசம் சோறு திங்க முடியுமா என்று கூறி கிண்டல் செய்து, தின்று பாருங்கள் என ஒரு விரலை வைத்து கையை ஆட்டினார். யாருதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், ஒரு விரலால் மண்டையை மட்டும் தான் சொரிய முடியும். காது குடையலாம், சரக்கு அடித்து விட்டு ஊறுகாயை தொட்டு நக்கலாம். இதைத் தவிர ஒற்றை விரலை வைத்து வேறு ஒன்றும் செய்ய முடியாது, என்று பேசினார்.

இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் பைத்தியங்கள் என்று கிண்டல் செய்த ஐ லியோனி, அதிமுக கட்சியை நாசம் செய்து இன்று ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் பலாப்பழம் விற்று வருகிறார். இபிஎஸ் ஒற்றை விரலை வைத்துக்கொண்டு ஓங்கி அடிப்போம் என்கிறார். பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்துக்கொண்டு யாரை ஆதரிப்போம் என்று விழித்துக் கொண்டிருக்கிறார். பொண்ணு வலது காலை எடுத்து வைத்து ஒரு வீட்டிற்குள் நுழைய வேண்டும் அல்லது நம்பிக்கை இல்லையா..? இடது காலை வைத்து நடக்க வேண்டும். ரெண்டு காலையும் வச்சு சேர்த்து தவ்வி தவ்வி நடந்து போன நடக்க முடியுமா..? இன்றைக்கு அதுபோல்தான் நடந்துகிட்டு இருக்காரு எடப்பாடி.

ரொம்ப அருமையாக இந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியோட இந்த கபட நாடகத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். பாஜகவோட மாநில தலைவர் ஒரு தம்பி இருக்கிறார். இப்ப அவரே வாய்க்கு வந்ததெல்லாம் பேசிகிட்டு இருக்காரு, மழை பெய்தவுடன் முள்ளுச்செடிக்குள் தவளை சத்தம் கேட்கும் என்று கூறி, தவளை போல் மிமிக்கிரி செய்த லியோனி, மழை பெய்து தவளை கத்துவது போல் தான் இன்று பாஜக உடைய தலைவர் அண்ணாமலை கத்திக் கொண்டிருக்கிறார்.

பாம்பு பார்க்கிறது, மாப்பிள்ளை நீ இவ்வளவு நாள் இங்க தான் இருக்கியா..? என்று உன்னைய இவ்வளவு நாள் நான் தேடிக் கொண்டிருந்தேன். நீ இங்கே தான் சவுண்டு கொடுத்துகிட்டு இருக்கியா..? என்று பாம்பு கவ்விவிடும். இன்றைக்கு தம்பி அண்ணாமலையை சொல்கிறேன். எங்கள் திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பார்த்து பிஞ்ச செருப்பு என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்த யோகிதையும் கிடையாது. அதே மாதிரி பேசுவதற்கு எங்களுக்கும் தைரியம் இருக்கிறது. துணிச்சல் இருக்கிறது.

ஆனால் அப்படி அநாகரிகமாக பேசுபவன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவன் அல்ல. இன்றைக்கு அண்ணாமலை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன், தவளையை பாம்பு எப்படி வந்து கவ்வி கொள்ளுமோ, அதேபோல ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பாஜக உடைய கபட நாடகம் முடிவுக்கு வரப்போகிறது. எடப்பாடி பழனிச்சாமி உடைய கள்ளக் கூட்டணிக்கு முடிவு கட்டப் போகின்ற நாள் தான் ஏப்ரல் 19ஆம் தேதி. ஜூன் மாதம் ஐந்தாம் தேதி ரிசல்ட் வரும்போது, நீங்கள் அனைவரும் ரேடியோவில் கேட்கலாம் என்று கூறி செய்தி வாசிப்பாளர் போல் பேசி காட்டினார்.

லியோனி தொடர்ந்து பேசி திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் பொதுமக்கள் அனைவரும் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நிறைவு செய்தார்.

Views: - 125

0

0