‘முதல்முறையா மனசு ரொம்ப வலிக்குது… எனக்கு கட்சி தான் ரொம்ப முக்கியம்’ : உட்கட்சி மோதலால் திமுக எம்.பி. திருச்சி சிவா வேதனை…!!

Author: Babu Lakshmanan
16 March 2023, 2:22 pm
Quick Share

தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரியது என்று திமுக எம்பி திருச்சி சிவா என தெரிவித்துள்ளார்.

நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஐ காலனியில் உள்ள புதிய இறகு மைதானத்தை திறப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கட்சியினர் மைதானத்திற்கு சென்றார். அப்போது அந்த மைதானத்திற்கான முன்னேற்பாடுகளை செய்தவர் எம்பி சிவா என்பதால், அவர் பெயரை புறக்கணிக்கப்பட்டதாக கூறி எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு கார் முன்பாக கருப்புக்கொடி காட்டினர்.

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்தவுடன் திரும்பி வந்த திமுகவினர் சிவாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அனைவரும் தாக்கியதுடன் அவர்கள் வீடு புகுந்து கார், பைக் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக காவல்துறையினர் கருப்பு கொடியை காட்டிய நபர்கள் கைது செய்தனர்.

தொடர்ந்து, அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, திமுகவின் மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ் மற்றும் சிலர் காவல் நிலையத்துக்கு சென்று அந்த தாக்குதல் நடத்தியதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்நது , மேற்கண்ட 4 பேரும் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து, திருச்சி செஷன் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ், துரைராஜ், திருப்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை பகரனில் இருந்து விமானம் முலம் திரும்பிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :- நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பக்ரேன் சென்று இருந்தேன். நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன்.

இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான்.

இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. நான் ஊரில் இல்லாத போது, என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டு உள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. மன சோர்வில் உள்ளேன். மனசு சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தவில்லை. உங்களை நான் மீண்டும் சந்திக்கிறேன், என தெரிவித்தார்.

Views: - 385

0

0