சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட பெண்… நடைபயிற்சி சென்ற போது தாக்கிய கொள்ளையன் : அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
16 March 2023, 3:40 pm
Quick Share

திருச்சியில் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணை தாக்கி, தரதரவென்று தார்ச்சாலையில் இழுத்துச் செல்லும் காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலைப் பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி சீதாலட்சுமி (53). இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றிருக்கிறார்.

இவர் தனியாக நடைபயிற்சி செல்வதை கண்காணித்த மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்து, உருட்டுக் கட்டையால் தலையின் பின்புறம் அடித்துள்ளார். மயங்கி விழுந்த அவரை தரதரவென்று இழுத்து ஓரமாக போட்டுவிட்டு, அவரது இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இது குறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கண்ட்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி, திருக்காட்டுப்பள்ளி பழமானேரியை சேர்ந்த செந்தில்குமார் என்ற நபரை கைது செய்ய முயன்ற போது, அவர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார்.
அப்போது வாகனம் அதிவேகமாக சென்று தடுப்புக் கட்டையில் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது கால் உடைந்தது. உடனடியாக அவரை மீட்ட போலீசார், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட சீதாலட்சுமியை செந்தில்குமார் தாக்கி, அவரை தரதரவென்று தார்ச்சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Views: - 428

0

0