அதிமுகவை நேரடியாக எதிர்க்க தைரியம் இல்ல.. பணம், பிரியாணி கொடுத்து மக்களை அடைச்சு வெச்சிருக்காங்க : இபிஎஸ் பரப்புரை!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 8:17 pm
EPS - Updatenews360
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகள் வேட்பாளரை நிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அவர் வீரப்பாளையத்தில் பிரச்சாரத்தில் பேசிய போது தமிழகத்தில் உள்ள 25 அமைச்சர்களும் மக்கள் பணியை விட்டுவிட்டு ஈரோடு கிழக்கு முகாமிட்டுள்ளார்கள்.

இங்கு வந்து வடை சுடுவதும், டீ ஆற்றுவதும், புரோட்டா போடுவதுமாக இருக்கிறார்கள். இதெல்லாமா அமைச்சர்களின் வேலை? மக்களுக்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு இதென்ன வேலை? இன்று கூட நான் வரும் போது பார்த்தேன்.

மக்களை ஆடு மாடுகளை அடைத்து வைத்திருப்பது போல் முதல்வர் ஸ்டாலினுக்காக சேலத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ரூ 2000, பிரியாணி பாக்கெட் கொடுக்கிறார்கள்.

இதில் எனக்கு மகிழ்ச்சிதான். கொள்ளையடித்து வைத்த பணத்தில் மக்களுக்கு ரூ. 2000 கொடுக்கிறார்கள். நான் வந்ததால் இந்த பணம் கிடைத்தது. அது போல் இரு வேளையும் பிரியாணி வாங்கித் தருகிறார்கள். நன்றாக வயிறார சாப்பிடட்டும். ஆனால் ஓட்ட மட்டும் தென்னரசுவுக்கு போட்டு விடுங்கள்.

இந்த தேர்தலுக்காக எல்லா அமைச்சர்களும் முகாமிட்டுள்ளார்கள். இதற்கு முன்பு கூட இதே போல் முகாமிட்டிருந்தால் ஈரோடு கிழக்கு பகுதி மக்கள் ஏன் இப்படி அடிப்படை திட்டங்கள் கூட இல்லாமல் கஷ்டப்பட போகிறார்கள்.

25 அமைச்சர்கள் ஆளுக்கு ஒரு திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் கூட இந்த மக்கள் நன்றாக இருந்திருப்பார்கள். அதிமுகவை நேரடியக எதிர்க்க திமுகவுக்கு தைரியம் இல்லை. அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சி.

ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் ரூ 454 கோடி செலவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Views: - 354

0

0