நீல நிற சட்டை… முகத்தில் தாடி.. அமலாக்கத்துறை கஸ்டடியில் செந்தில் பாலாஜி.. புழல் சிறைக்கு வெளியே பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
7 August 2023, 9:06 pm
Quick Share

சென்னை ; புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்துள்ளனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த மாதம் கைது செய்தது.

தற்போது புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் இல்லை. கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தக்கல் செய்ய முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, செந்தில்பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் போது துன்புறுத்தக் கூடாது என்றும், விசாரணைக்கு பிறகு 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது. இதனை தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். நீல நிற சட்டை அணிந்து தாடியுடன் காணப்பட்ட செந்தில் பாலாஜியை TN 02 BA 1207 என்ற எண் கொண்ட வாடகை வாகனத்தில் செந்தில் பாலாஜியை கூட்டிச் செல்கிறது அமலாக்கத்துறை.

காரில் இருபக்கமும் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் அமர்ந்திருக்க நடுவில் செந்தில் பாலாஜி அமர்ந்திருக்கிறார். சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 267

0

0