உண்ட கட்சிக்கே ரெண்டகம் செய்த திருநாவுக்கரசர்… துரியோதன, துச்சாதன கும்பல் தான் திமுக : ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
14 August 2023, 2:33 pm
Jayakumar - Updatenews360
Quick Share

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுக அவமானப்படுத்தியதாகவும், துரியோதன, துச்சாதன கட்சி தி.மு.க என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து மதுரையை நோக்கி “தொடர் ஜோதி ஓட்டம்” நடைபயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:- நீட் தேர்வு தோல்வியால் மாணவன் மற்றும் அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் மன வேதனையை கொடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ஒழிப்பதற்காகத்தான் இருக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைவரும் சொல்லி வந்தனர்.

சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் உள்ளது. இதற்கு எத்தனை முறை திமுக அழுத்தம் கொடுத்தது, நாடாளுமன்றத்தில் நீட் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன குரல் கொடுத்தார்கள்? நீட், கச்ச தீவு, உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த ஒரு உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் திமுகவினர் குரல் கொடுக்க வில்லை.

ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களுக்கு தான் தெரியும் என்றெல்லாம் சொன்னார்கள். அதற்கான கையெழுத்தை முதலில் போட்டிருக்க வேண்டியதுதானே…? திமுக உரிமையை மீட்டெடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவே இல்லை, எனக் கூறினார்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்பி திருநாவுகரசர் கூறிய கருத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை திருநாவுக்கரசு செய்திருக்கிறார். பெண்ணென்றும் பாராமல் ஆபாச வார்த்தைகளை பேசி மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள். ஒரு பெண்ணை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, அவ்வளவு அவமானப்படுத்தினார்கள்.

துரியோதன, துச்சாதன கும்பல் தான் இந்த திமுக கும்பல். தேர்தல் ஆதாயத்திற்காக இப்படி உண்மைகளை மறைத்து திருநாவுகரசர் பேசியிருக்கிறார். திருநாவுக்கரசு அரசியலில் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அதிமுகவுக்கு என்றென்றும் கடமைப்பட்டு இருக்க வேண்டும், என்று கூறினார்.

Views: - 285

0

0