அந்த ரெண்டு பேரைத் தவிர மொத்த பேரும் இங்கதான் இருக்காங்க… திருமங்கலம் ஃபார்முலாவையே மிஞ்சியாச்சு : ஜெயக்குமார் பேச்சு

Author: Babu Lakshmanan
10 February 2023, 5:59 pm
Jayakumar - Updatenews360
Quick Share

சென்னை : ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்று புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடக்க உள்ள சூழ்நிலையில் ஆளும் திமுக அரசு ஜனநாயக அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

நேற்று, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த கூட்டத்திற்கு யாரும் செல்ல கூடாது என்பதற்காக அதை தடுக்க பல இடங்களில் சட்டவிரோதமாக பந்தல்கள் அமைத்து 1000 ரூபாய் பணம், உணவு கொடுத்தார்கள். இது திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

திமுக ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. இங்கு முதலமைச்சர் மற்றும் அவர் மகன் ஆகிய இருவரை தவிர, 30 அமைச்சர்களும் ஈரோட்டில் தான் முகாமிட்டு உள்ளனர். ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார். அவர்கள் தோற்க தான் போகிறார்கள், என்றார்.

தொடர்ந்து,நேற்று அறிமுக கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணம் என்பதால் அவர் சென்றார். ஆனால் பாஜக சார்பில் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். தங்கள் கூட்டணி பிரச்சினை இல்லை.

இரட்டை இலை சின்னத்தை மவுசு குறைந்தது என்று சொல்வது சரி அல்ல. ஈனத்தனமான பிறவிகள் இன்னும் மாறவில்லை. டிடிவி நன்றி கெட்டவர். சசிகலா, டிடிவி, ஓ பி எஸ் ஆகியோரை புரட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது. பொய் சொல்வதற்கு அளவு உள்ளது. தேர்தல் வாக்குறுதியை 85% நிறைவேற்றியதாக முதலமைச்சர் சொல்கிறார்.
கல்விக் கடன் ரத்து செய்தார்களா?, நீட் ரத்து செய்தீர்களா?, பயிர் நாசமானது பார்க்காமல் உள்ளனர்.

தொடர்ந்து, ஜனநாயக அமைப்பில் புகார் கொடுப்பது என்பது அடிப்படையான உரிமை. நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம். தேர்தல் கமிஷனுக்கு மேல் நீதிமன்றம் உள்ளது, என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆலந்தூர் காவலர் கொல்லப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கு பாதுகாப்பு இல்லை .திரைப்படங்கள் போல தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. எங்கள் ஆட்சியில் காவல் துறை என்றால் மிடுக்கு இருக்கும். இன்று அப்படி இல்லை. யார் அடிக்க போகிறார்கள் என்று உள்ளது. தர்ம அடி வாங்கும் காவல் துறையாக உள்ளது, என்று குற்றம் சாட்டினார்.

Views: - 316

0

0